பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


ஊருக்கு வந்ததும் தகப்பனார் காலமானதும், பூங்காவனம் தற்கொலை செய்து கொண்டதும் அவனுக்குத் தெரியவந்தன. கோவிலில் அவனுக்கு உறியடி பாத்தியதை கிடையாது என்றார்கள். நாலைந்து வருஷமாகக் கோவிலாரோடு கோர்ட்டில் வழக்குத் தொடுத்துப்போராடி இறுதியில் மீண்டும் உறியடிப்பாத்தியதை உண்டு என்று செய்து கொண்டான்.

பழையவற்றை மறந்து ஊரில் வேறு சிலர் அவனுக்கு அத்தனை வயதிற்கு மேலும் தங்கள் பெண்ணைக் கொடுக்க முன் வந்தனர்.அவனோ,“பூங்காவனத்திற்கு பின் நான் வேறு யாரையும் மணக்க விரும்பவில்லை” என்று சத்தியம் செய்திருப்பதைக் கூறி மறுத்துவிட்டான்.

கோர்ட்டில் தீர்ப்பான பின்பு இதுதான் அவன் அடிக்கிற மூன்றாவது உறியடி முறை. இன்னும் கலியாணமே செய்து கொள்ளாமல் ‘பீஷ்மக் கரையாளன்’ என்ற பெயருக்கு இலக்கியமாகவே இருக்கிறான். காலம்கூட அவனை மாற்ற முடியவில்லை.

திருவடியா பிள்ளை கூறி முடித்தார். ஒரு நீண்டபெருமூச்சோடு கதைக்கு முத்தாய்ப்பு வைத்தார்.

பல நாட்களாக நான் சிந்தித்துக் கொண்டிருந்த தத்துவம் அன்றைய தினம் எனக்கு நன்றாக விளங்கிவிட்டது.

எட்டுவதுபோல தோன்றி எட்டாமல் போவதும், எட்டாதது போல் தோன்றி எட்டுவதும், நடப்பதுபோல், தோன்றி நடக்காமல் போவதும், நடக்காதது போல் தோன்றி நிச்சயமாக நடப்பதும் உறியடி விழாவில் மட்டும் அல்ல; வாழ்க்கையிலும் அப்படி உண்டு போலிருக்கிறது!

(உமா, டிசம்பர், 1957)