பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


“ஓ! நான் ஆடியதைக் குறிப்பிடுகின்றாயா? எனக்கு இது விளையாட்டு. இப்படியே செய்து வழக்கமாகிவிட்டது. இந்த யுகாந்த நாடகத்தை என்னால் நிறுத்த முடியவில்லை.”

“உயிர்களை அழிப்பது உங்களுக்கு நாடகமாக இருக்கலாம். வழக்கமான விளையாட்டாக இருக்கலாம். ஆனால் நான் பெற்றவள், தாய்! பாசத்துக்காகவும் அன்புக்காகவும் சரீரத்தைச் சுமந்து வாழ்கிறவள்.”

“இருக்கட்டுமே, தேவீ! அப்படியே இருந்தாலும் பிறப்பிடமாயிருந்தவளைவிடப் பிறப்பித்தவனுக்கு உரிமை அதிகம்தானே?”

“ஆள்வதுதான் உரிமைக்கு அடையாளம், அழிப்பது அல்ல”

“நான் என்ன செய்யலாம், பார்வதி? இந்த உலகத்தை வசதியோடு வாழ்விக்கிறபோதெல்லாம் அங்கிருப்பவர்கள் என்னைப் பற்றி நம்புவதோ, உணர்வதோ இல்லை! நான் ஏதாவது கஷ்டங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தால்தான் என்னை நினைக்கிறார்கள்; என்னை நம்புகிறார்கள்.”

“குழந்தைகள் முருகனும், கணபதியும் நம்மை மறந்துவிட்டால் அவர்களுக்குக் கஷ்டத்தை உண்டாக்கியா நாம் அவர்களது பெற்றோர் என்பதை உணர்த்துகிறோம்?”

“நீ சொல்வது சரிதான்! ஆனால் இங்கிருந்து நான் எதை ஆடினாலும் அதன் சுழற்சி வேகத்தை உயிர்கள் சமாளித்துத்தான் ஆக வேண்டும். காரணம்; இது ருத்திர பூமி. ரெளத்திரத்தை உண்டாக்கும் இடம். சம்ஹாரத் தொழில் நிகழும் களம். நீ ரஸிக்கும்படியான கலைத்தாண்டவத்தை நான் இங்கு ஆட முடியாதே பார்வதி. என்ன செய்வது? கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.”

“ஏன் முடியாது? எல்லாம் முடியும். வெறியாட்டம் ஆடாமல் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஆடினால் அது மனோரம்மியான நிருத்தியமாக இருக்கும். நீங்கள் திரிசூலதாரியாகத் தாண்டவம் ஆடத்தான் துறுதுறுத்துப் போய்த் திரிகிறீர்கள். அதனால்தான் உங்களால் முடியவில்லை.”

“உண்மைதான்! இந்த அபூர்வமான கலை மனத்தை உயர்த்தப் பயன்பட வேண்டும். வெறும் ஆசை ஆபாசங்களைக் கிளறி மனத்தை அழிக்கும் வெறியாட்டமாகப் பயன்பட்டுச் சீரழிந்துவிடக்கூடாது!”

“நல்ல வேளை! உலகத்தவர்களும் இதை வெறியாட்டமாகப் பயன்படுத்திவிடாமல் பரத முனிவர் காப்பாற்றிவிட்டார். அவர் செய்த பெருந்தொண்டினால்தான் உலகத்தில் இது ஒரு புனிதமான கலையாக மட்டும் இருக்கிறது.”

“என்னவோ, போ தேவீ…! உலகத்தார் வாழப் பயன்படுத்தும் கலையை நான் அழிக்கப் பயன்படுத்துகின்றேன். என் தொழிலும் நானும் செய்த பாவம் இது!”

“ஒன்று செய்தால் என்ன?”