பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / கோலாட்டம் 209

அவள்தான் அங்கிருந்த சிறுமிகளுக்குள் பெரியவள். கோலாட்டத்துக்கு வந்திருந்த பெண்களுக்கெல்லாம் தலைவியைப் போலத் தோன்றினாள்.

“மாமா கோபித்துக் கொள்ளமாட்டீர்களே? இன்றைக்குத்தான் நல்ல நாள் பார்த்து முதல் முதலாகக் கோலாட்டம் தொடங்குகிறோம். காலையிலே பசுவனுக்கு மண் எடுத்தாயிற்று… வந்து… வந்து… வருஷா வருஷம் வழக்கமாக இந்த இடம்தான்…”

“இதோ பார்! நீங்கள் மண் எடுத்தால் என்ன? கல்லெடுத்தால் என்ன? அதனால் எனக்கொன்றும் ஆகப்போவதில்லை. இந்தக் கெஞ்சுதலுக்கெல்லாம் மசிகிற பேர்வழி நான் இல்லை. மூச்சுவிடாமல் இங்கிருந்து போய்விட வேண்டும்! இல்லாவிட்டால்……?”

அந்தப் பெண் தலையை நிமிர்த்தி, இமைக்காமல் என் முகத்தை உற்றுப் பார்த்தாள். பளிங்கு வட்டத்தில் பதித்த கருநாவற்கனிகளைப்போன்ற அவள் விழிகள் என்னை உடுருவின.

“என்ன முறைத்துப் பார்க்கிறாய்? தலையைக் கிள்ளி விடுவாயோ?”

“இங்கிருந்து நாங்கள் போகாவிட்டால் என்ன செய்வீர்களோ?” அந்தப் பெண் திடமான குரலில் என்னைக் கேட்டாள். பின்னாலிருந்து வேறு சில குரல்களும் அவளுடன் ஒத்துப் பாடின; “அப்படிக் கேளடி,சொல்கிறேன், இந்த மாமா என்னவோ நம்மை ரொம்பத்தான் மிரட்டுகிறார்!”

“நாம் இங்கேயே கோலாட்டம் போடுவோம். இவர் என்னதான் செய்ய முடியுமென்று பார்த்து விடுவோமே!”

“வருஷத்துக்கு ஒரு தடவை வருகிற நல்ல காரியம்.இதற்குக்கூட இப்படியெல்லாம் வம்பு செய்கிறாரே!”

இடையில் அந்தக் கூட்டத்திலேயே வயதில் சிறியவளும் மழலை மாறாத பேச்சையுடையவளுமான ஒரு சிறுமி முகத்தை அழகு காட்டும் பாவனையில் வைத்துக் கொண்டு எனக்கு எதிரே வந்தாள். “ஐயே! நாங்க கோலாட்டம் போடுகிற தனாலேதானே மழை பெய்யறதாம்! இல்லாவிட்டால் பெய்யுமோ? மழை பெய்யாட்டா வயலெல்லாம் விளையாதே…” என்று மழலைச்சொற்களைக் குவிந்த சிறு உதடுகளிலிருந்து குத்திக் காட்டும் தோரணையில் வெளியிட்டாள்.

உடனே கொல்லென்ற சிரிப்பொலி எழுந்தது. அத்தனை பெண்களும் ஏதோ பெரிய வேடிக்கையைக் கண்டுவிட்டவர்கள் போலச் சிரித்தனர். அந்தச் சிரிப்பொலி என் உடலின் ஒவ்வோர் அணுவிலும் நெருப்பைப் பாய்ச்சினாற் போலிருந்தது.

வீட்டுக்குள் வருவோர் கால் கழுவிக் கொண்டு துய்மையாக வருவதற்காக என் மனைவி வழக்கமாக வாசற்படிக்கு அருகில் ஒரு பெரிய வாளி நிறையத் தண்ணீர் கொட்டிவைத்திருப்பாள். தெருவில் இறங்கி நின்று கொண்டிருந்தவன் ஆத்திரத்தோடு வாசற்படிக்குப் பக்கத்தில் திரும்பிப் பார்த்தேன். கொஞ்சங்கூடக் குறையாமல் வழிய வழியத் தண்ணீரோடு வாளி அங்கே வைக்கப்பட்டிருந்தது. குபீரென்று பாய்ந்து அந்த வாளியைக் கையில் எடுத்தேன்.அவர்கள் சிரித்த ஒலி இன்னும் அடங்கக்கூட இல்லை.
நா.பா. I - 14