பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


“என்ன செய்வேனா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்” என்றுசொல்வித கொண்டே ஒரு வாளித் தண்ணீரையும் எதிரே நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணின் தலையில் வீசிக் கவிழ்த்தேன்.

“ஓடுங்கள்! இன்னும் ஒரு விநாடி இங்கு நின்றீர்களோ! உங்கள் எல்லோர் தலைக்கும் இந்த மாதிரி அபிஷேகம்தான் கிடைக்கும்…”

என் எச்சரிக்கையைக் கேட்டும் ஒரு பெண்ணாவது நகரவில்லை. அப்படியேதான் நின்று கொண்டிருந்தார்கள். அந்தத் துணிச்சல்காரி சொட்டச் சொட்ட நனைந்து போய் அப்போதுதான் குளத்தில் முழுகி எழுந்திருந்தவள் மாதிரி நின்றாள். அதே வெட்டுப் பார்வை! அதே அழுத்தம்! குளிர்ந்த தண்ணீர் பட்ட உடல் வெடவெடவென்று நடுங்கியது. கையில் பிடித்துக் கொண்டிருந்த சிவப்பு நிறக் கோலாட்டக் குச்சிகள் நடுக்கத்தினால் தாமாகவே ஒன்றோடொன்று மெதுவாக அடித்துக் கொண்டன. அவள் பார்வை என் முகத்தை விட்டு விலகவே இல்லை. விருட்டென்று பின்னால் திரும்பினாள். “அடியே! ஒருத்தியாவது நகராதீர்கள். எல்லோரும் இப்படி வரிசையாக வந்து முன்னால் நின்று கொள்ளுங்கள். இந்த மாமாவால் எத்தனை வாளி தண்ணீர் தூக்கிக் கொண்டு வந்து கொட்ட முடியுமோ கொட்டட்டும். பார்த்து விடலாம். நமக்கும் பிடிவாதம் பிடிக்கத் தெரியும்!” ரோஷம் நிறைந்த குரலில் அவள் இப்படிக் கட்டளையிட்டபோது மளமளவென்று அத்தனை பெண்களும் முன்னால் வந்து நின்றனர்.

எனக்கு ஏற்பட்ட வியப்புக்கு ஓர் அளவேயில்லை! இந்த ஒரு பெண்ணின் வார்த்தைக்கு இவர்களிடையே இவ்வளவு சக்தியா? என்ன பிடிவாதம்! எவ்வளவு நெஞ்சழுத்தம்? கேவலம், பேதைப் பருவத்து அறியாமை மாறாத இந்தப் பிஞ்சு மனங்களில்கூட இப்படி ஒரு வைராக்கியமா?

அந்தப் பெண்களிடம் சமாதானமாகப் பணிந்து போகவும் ஆண்மையும் கெளரவமும் இடம் அளிக்கவில்லை. “இதோ பார்! இந்தச் சண்டித்தனத்துக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. மறு பேச்சுப் பேசாமல் இங்கிருந்து போகிறீர்களா? அல்லது உங்களுக்கு அடி உதை வேண்டுமா?” என்று அதட்டினேன்.

“முடிந்தால் அடியுங்கள் உதையுங்கள் இன்றைக்கு மட்டுமில்லை; இனிமேலும் பத்தாவது நாள் பசுவனைக் குளத்தில் போட்டு ஜோத்திரை முடிகிற வரையில் இந்த இடத்தில் தான் நாங்கள் கோலாட்டம் போடப் போகிறோம்!” அந்தப் பெண்தான் திமிராகப் பேசினாள். பேசினதோடு நிற்கவில்லை. உடன் நின்றவர்களை மறுபடியும் முன்போலவே வட்ட வியூகத்தில் நிறுத்திக் கொண்டு பிழியப் பிழிய நனைந்த உடம்புடனே கோலாட்டம் போடத் தொடங்கி விட்டாள். அந்தப் பெண் கோலாட்டக் குச்சிகளை அடிப்பதாகத் தோன்றவில்லை. என் நெஞ்சையே அடித்து நொறுக்குவது போல் தோன்றியது.