பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / கோலாட்டம் 211


“யாரோடு இவ்வளவு கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறீர்கள், வாசலில்? ― எழுதுவதையும் விட்டு விட்டுச் சண்டை போடுகிறீர்களே?” என்று கேட்டுக் கொண்டே என் மனைவி உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்தாள்.

“நீயே வந்து பார் இந்த அநியாயத்தை! உள்ளே உட்கார்ந்து நிம்மதியாக ஒரு வரிகூட எழுத முடியவில்லை. இந்த நாவலை இன்னும் நாலு நாட்களில் அனுப்பியாக வேண்டும். கோலாட்டம் போடுகிறோம் என்று இந்தப் பெண்கள் அப்போதிருந்து கூச்சல் போட்டு எழுத முடியாமல் சதி செய்கிறார்கள். இங்கேதான் வழக்கமாம். அதனால் இங்கேதான் போடுவார்களாம். நீயாவது கொஞ்சம் வந்து சொல்லேன். உன் வார்த்தையையாவது கேட்கிறார்களா, பார்ப்போம்!” நான் அவளைச் சமாதானத்துக்கு அழைத்தேன்.

பெண்ணுக்குப் பெண் சொன்னால் சமாதானமாகக் கேட்டுக் கொண்டு வேறு இடத்துக்குப் போய்விடுவார்கள் என்பது என் நினைப்பு. ஆனால் அவள் வாசலுக்கு வந்ததும் வராததுமாக அந்தப் பெண்கள் ஓடிவந்து அவளைச் சூழ்ந்து கொண்டு என்னைப் பற்றி முறையிடத் தொடங்கிவிட்டார்கள்.

“மாமீ! மாமீ! உங்கள் வீட்டு மாமா என் மேலே ஒரு வாளி நிறையத் தண்ணீரை அப்படியே கொட்டிவிட்டார்” என்று நனைந்து போயிருந்த தன் உடம்பையும் காலியாயிருந்த வாளியையும் சுட்டிக் காட்டினாள் அந்தத் துடுக்குக்காரப் பெண்.

“மாமீ! மாமீ! நீங்க சொல்லுங்க… நாங்கள் கோலாட்டம் போடுகிறதுனாலேதானே மழை பெய்கிறது” என்று விரியாத மாதுளை மொட்டுக்களைப் போன்ற உதடுகள் குவிய மழலை மிழற்றியது அந்தக் குழந்தை.

“வழக்கமாக இங்கேதானே கோலாட்டம் போடுவோம்? உங்களுக்குத் தெரியாதா, மாமீ?” என்று அனுபவ பாத்தியதை கொண்டாடினாள் மற்றொரு சிறுமி. அவ்வளவையும் கேட்டுவிட்டு என் மனைவி என்னையே திருப்பிக் கொண்டாள்.

“இதென்ன கூத்து? உங்களுக்கே நன்றாயிருக்கிறதா இது? இந்தப் பெண் தலையிலே ஒரு வாளி பச்சைத் தண்ணீரைக் கவிழ்த்திருக்கிறீர்களே? கோபம் வந்தாலும் மனிதனுக்கு இப்படியும் நிதானம் தெரியாமல் வருமா?”

“என் எழுத்து வேலையைக் குட்டிச்சுவராக்கிவிட்டார்களே! அதில் இந்தப் பெண்தான் ரொம்பப் பொல்லாதவள். மற்றவர்களையெல்லாம் தூண்டி விடுகிறவளும் இவள்தான். எனக்கு என்ன கோபம் வருகிறது தெரியுமா?” என்றேன்.

“போதுமே சமர்த்து இவளுடைய அப்பா அம்மா தேடிக் கொண்டு வந்து, ‘ஏனய்யா நீ ஒரு மனுஷன்தானா? இப்படிச் செய்திருக்கிறாயே?’ என்று கேட்டால் தெரியும் வழியை விடுங்கள்; உள்ளே போய் அவளுடைய தலையைத் துவட்டி வருகிறேன்!” என்றாள்.

அவளைத் தொடர்ந்து தெருவில் நின்று கொண்டிருந்த அத்தனை சிறுமிகளும் உள்ளே நுழைந்துவிட்டனர்.