பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


‘சரி! இனிமேல் அவள் பாடு: எப்படியாவது சமாதானமாகச் சொல்லி அந்தப் பெண்களை வேறு இடத்தில் போய்க் கோலாட்டம் போடச் செய்துவிடுவாள்’, என்றெண்ணிக் கொண்டு அறைக்குள் நுழைந்தேன். எழுதுவதற்காகப் பேனாதுை; கையில் எடுத்தேன்.

ஆனால், அதற்குள் வீட்டின் கூடத்திலிருந்தே கோலாட்டச் சத்தம் கிளம்பியது “கோலே நல்ல கோலே” என்று பாட்டொலியும் எழுந்தது. கணீர் கணீர் என்று குச்சிகள் அடிபடும் ஓசையோடு என் மனைவியின் குரல் பாடியது காதில் விழுந்தது.

எனக்கு இப்போது வந்த ஆத்திரம் சொல்லி மாளாது. பேனாவை முடி மேஜைமேல் எறிந்து விட்டு உள்ளே போனேன். உள்ளே கூடத்தில் கண்ட காட்சி என் கோபத்தைப் பன்மடங்கு வளர்த்தது. தெருவில் எந்த வியூகத்தில் நின்றார்களோ, அதே வியூகத்தில் நின்று அந்தப் பெண்கள் கூடத்தில் கோலாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆட்டத்துக்குப்பதம் பாடுகிறவள்போல் என் மனைவி தனியே நாற்காலியில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தாள்.

“இதென்ன? வீடா? சத்திரமா? நான் இந்த நாவலை எழுதவிடக்கூடாதென்ற எண்ணமா? இவர்கள் வீதியில் கோலாட்டம் போட்டாலே எழுதுவதற்கு இடையூறாக இருக்கிறது. நீ என்னடாவென்றால் வீட்டுக்குள்ளேயே…?”

“நிறுத்துங்கள்! உங்களுக்கு வருஷம் முந்நூற்றறுபது நாளும்தான் ஏதாவது எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்காக ஊர், உலகத்தில் ஒரு நல்லது நடக்காமல் போய்விடுமா! இன்னும் பத்து நாட்களுக்கு இவர்கள் தெருவில், நம் வீட்டுக்கு அருகேதான் கோலாட்டம் போடப் போகிறார்கள். உங்களுக்காக ஊர் வழக்கம் நின்றுவிடாது. நீங்கள் வேண்டுமானால் எங்காவது கண்காணாமல் தோப்பு, துரவு என்று ஊருக்கு வெளியே போய் எழுதிக் கொண்டிருங்கள்.”

“ஓகோ! உரிமையைவிட வழக்கத்துக்கு அவ்வளவு உறவா?”

“உங்கள் தத்துவப்பேச்செல்லாம் எனக்குப் புரியாது. இந்த இடத்தில் நீங்கள் விட்டுக் கொடுத்துதான் ஆக வேண்டும்!”

பேசாமல் அறைக்குத் திரும்பி வந்தேன். உள்ளே மறுபடியும் கோலாட்டம் ஓசை கிளம்பியது. ஒரு தபால் கார்டை எடுத்தேன். “அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். கடுமையான நிமோனியாக் காய்ச்சலால் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதால் உங்களிடம் ஒப்புக் கொண்டபடி நாவலை முடித்து அனுப்ப இயலாமற் போய்விட்டது. இன்னும் பதினைந்து நாட்கள் அவகாசமளித்தால் ஒருவேளை முடித்து அனுப்பிவிடலாமென்று எண்ணுகிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும்.”

முகவரி எழுதிய பின்பு கடிதத்தை நாலு வீடு தள்ளித் தெருவில் ஒரு வேப்ப மரத்தடியில் இருந்த தபால் பெட்டியில் கொண்டு போய்ப் போட்டு விட்டு வந்தேன். மனைவி உள்ளேயிருந்து வந்தாள்.