பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / மல்லன் திருவேங்கடம் 217


திருவேங்கடம் வலக்கையை உயர்த்தி மீசை துணியைத் தடவிக் கொடுத்தான். உதடுகளில் அலட்சியமான கேலிச் சிரிப்பு இழையோடியது. பார்வை முறைத்தது.

“தம்பிக்கு ஊர் வளமுறை ஒன்றும் தெரியாது போலிருக்கிறதே?”

குத்தல் நிறைந்த இந்தக் கேள்வியின் அர்த்தம் புரியாமல் டிக்கட் சரிபார்க்கிற ஆள் திகைத்தான். அவன் மலையாளி. தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் திகைப்பும் பயமும் கொண்டுமிரண்ட நோக்கால் திருவேங்கடத்தை நிமிர்ந்து பார்த்தான் அவன்.

“என்ன தம்பி, முறைத்துப் பார்க்கிறாய்?” முழுக்கைச் சட்டையின் கையை மேல்நோக்கி மடக்கிவிட்டான் திருவேங்கடம். சத்தமும் கூப்பாடும் வலுத்தன. குழப்பம் ஏற்பட்டது. இன்னும் சிறிது நேரத்தில் கைகலப்பு ஏற்பட்டுவிடும் என்று சொல்லக்கூடிய நிலை.

அந்தச் சந்தர்ப்பத்தில் சர்க்கஸ் கம்பெனி பயில்வான் திரையை விலக்கிக்கொண்டு வாசல் பக்கமாக வந்தான். திருவேங்கடத்தைச் சிறிதுநேரம் உற்றுப் பார்த்ததும் கட்டுடலும் ஆண்மையின் அழகும் ஒருங்கு நிறைந்த சர்க்கஸ் கம்பெனிப் பயில்வானின் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது.

“அடேடே! வாருங்கள், வாருங்கள். நீங்கள்தானே திருவேங்கடம்? நான் உங்களைப்பற்றி இந்த ஊருக்கு வந்ததுமே கேள்விப்பட்டேன். நானாகவே வந்து உங்களைச் சந்திக்கநினைத்திருந்தேன். தற்செயலாக இருவருமே சந்தித்துவிட்டோம்.”

வேகமாக முன்னால் நடந்து வந்த திருவேங்கடத்தின் கையைப் பிடித்துக் குலுக்கினான் அவன். திருவேங்கடம் அசடு வழியச் சிரித்தான். அவன் இதை எதிர்பார்க்கவே இல்லை. டிக்கெட் சரி பார்க்கிற ஆளிடம் மலையாளத்தில் ஏதோ சொல்லிவிட்டுத் திருவேங்கடத்தினிடம் நீண்டநாள் பழகிய நண்பனைப்போல் தோளில் கைப்போட்டு உள்ளே அழைத்துக்கொண்டு போய்விட்டான் சர்க்கஸ் கம்பெனிப் பயில்வான். திருவேங்கடத்தின் சீடர்கள் கூட்டத்தையும் டிக்கட் இல்லாமல் உள்ளே விட்டுவிட்டார்கள். கொட்டகைக்குள் போனதும் சீடர் கூட்டத்தைத் தரை மகா ஜனங்களோடு உட்காரச் செய்துவிட்டுத் திருவேங்கடத்தை மட்டும் தான் தங்கியிருந்த கூடாரத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றான் அந்தப் பயில்வான். வெல்வெட் மெத்தை தைத்த சோபாவில் அவனை உட்கார வைத்தான். ஒன்றும் சொல்ல, செய்ய, நினைக்க, அவகாசமின்றி அவனுடைய சிரிப்பிலும் முகமலர்ச்சியிலும் பேச்சிலும் மூழ்கிப் போனான் முரட்டுத் திருவேங்கடம்.

சர்க்கஸ் பயில்வான் உட்புறமாகத் திரும்பியாரையோ கூப்பிட்டான்.வெண்ணிற சர்க்கஸ் கவுனும், கால் அங்கியும் அணிந்த இளம்பெண் ஒருத்தி சிரித்த முகத்துடனே திரைமறைவிலிருந்து வெளிவந்து வணங்கினாள். யாரை வணங்குகிறாளோ என்று இரண்டொரு விநாடிகள் அயர்ந்து பேசாமல் இருந்த திருவேங்கடம் பின்பு தன்னைத்தான் வணங்குகிறாள் என்று தெரிந்ததும் சமாளித்துக்கொண்டு பதிலுக்கு வணங்கி வைத்தான்.