பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அதன்பின்பு குஸ்திப் பள்ளிக்கூடத்து வகுப்புகள் காலையிலும் மாலையிலும் ஒழுங்காக நடக்கவில்லை. 'கோதா'வில் குஸ்திப் பயிற்சி அளிக்க வேண்டிய வாத்தியார் எப்போதும் சர்க்கஸ் கூடாரத்தில் வம்பளந்து கொண்டிருந்தால் பள்ளிக்கூடம் எப்படி நடக்கும்?

"வாத்தியாருடைய காளையைச் சர்க்கஸ் கொட்டகைக்குக் கொடுத்துவிட்டார். அது அங்கே பழகவேணும், பாருங்கள். அதற்காக கொஞ்ச நாளைக்குப் பழக்கிக் கொடுத்துவிட்டு வருவதற்காகப் போய் வந்து கொண்டிருக்கிறார்" என்று கேட்டவர்களுக்குப் பதில் சொல்லி வாத்தியாரின் கெளரவத்தைக் கொஞ்ச நாளைக்குக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள் சீடப்பிள்ளைகள். பின்பு அவர்களும் அலுத்துப்போய் அந்த மாதிரி பதிலைச் சொல்வதை நிறுத்திக் கொண்டார்கள்.

"எனக்கு அன்றைக்கே தெரியுமே; எப்போது வாத்தியார் அந்தக் காளையை அவிழ்த்துக்கொண்டு போனாரோ, அப்போதே அந்தச் சர்க்கஸ்காரி அவரை அவிழ்த்துத் தலைப்பிலே முடிந்து கொண்டாள் என்று புரிந்துவிட்டதே!" என்று மிகவும் நயமாக மற்றவர்களுக்கு விஷயத்தை விளக்கினான் ஒரு சீடன்.

ஒன்றறை மாதத்துக்குப் பிறகு சர்க்கஸ் கம்பெனி ஒரு நாள் இரவு அந்தக் கிராமத்தைவிட்டுக் குடி பெயர்ந்தது. மறுநாள் காலை திருவேங்கடத்தை ஊரில் காணவில்லை. எங்கே போயிருப்பான்? தெரிந்த விஷயந்தானே?

(கலைமகள், தீபாவளி மலர், 1958)