பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

துரதிர்ஷ்டவசமாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ தெரியவில்லை . வீரமல்லன் கண்மாய் வெட்டியபோது ஆற்று மட்டத்தைவிடப் பள்ளமாக அமைந்துவிட்டது அவன் கண்மாய்.

இதன் விளைவு? ஆற்றுத் தண்ணிiரில் பெரும் பகுதி 'மூவரை வென்றான்'. கண்மாயில் பாய்ந்து அதை நிரப்பி விட்டு வடிகால் வழியே கலிங்கல் மட்டத்தைக் கடந்து கிழக்கேயுள்ள வேறு ஊர்களைச் சேர்ந்த கண்மாய்களுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டது.

காட்டாறுதானே? மேற்கே மலையில் மழை பெய்தால் தண்ணிiர் கரை கொள்ளாமல் பொங்கி வரும். இல்லையென்றால் வறண்டு போகும். வீரமல்லனின் இனாம் கிராமத்தில் சாகுபடி நிலங்கள் மிகவும் குறைவுதான். ஒருமுறை கண்மாய் பூரணமாக நிரம்பினாலே இரண்டு மகசூலுக்குக் குறையாமல் வரும்.

நத்தம்பட்டி ஜமீன் நிலப் பரப்போ மிகப் பெரியது. கன்னிமாலையாற்றின் தண்ணீரால் ஜமீனின் மூன்று கண்மாய்களும் இரண்டுமுறை நிரம்பினாலும் ஜமீன் நிலங்களுக்குப் போதாது. இப்போதோ, வீரமல்லன் கண்மாய் வெட்டியதன் விளைவாக ஜமீன் கண்மாய்கள் ஒருமுறை நிரம்புவதே கஷ்டமாயிற்று.

அப்போது அந்தத் தலைமுறையில் நத்தம்பட்டி ஜமீன்தாராக இருந்தவர் வீரமருதுத் தேவர் என்பவர். முன்கோபமும், ஆத்திரமும், எதையும் யோசிக்காமல் பேசுவதும் செய்வதுமாக அமைந்த சுபாவமுடையவர். வீரமல்லனை நேரில் கூப்பிட்டனுப்பி அவர் தம் தேவையைக் கூறியிருந்தால் அவனே ஒப்புக் கொண்டிருப்பான். அப்படிச் செய்யாமல் வீம்பு பிடித்த ஜமீன்தார் நேரடி நடவடிக்கையில் இறங்கினார்.

ஆற்றில் மேற்கே வெகுதூரத்தில் அணைகட்டி, வீரமல்லனின் கண்மாய்க்குத் தண்ணீரே போகாதபடி செய்தார். கூலிக்குக் கொள்ளைக்காரர்களைப் பிடித்து 'மூவரை வென்றான்' கிராமத்து இனாம் நிலங்களில் விளைந்து கிடந்த பயிர்களை இரவோடிரவாக அறுத்துவரச் செய்தார். 'மூவரை வென்றான்' கண்மாயில் மடைவாய்களையும், வடிகால்களையும், வாய்க்கால்களையும் சிதைத்து அழித்தார். வீரமல்லன் சில நாளைக்குப் பொறுத்திருந்தான்.

***

வைகள் எல்லாம் நடக்கும்போது மதுரைச் சீமையில் மங்கம்மாள் ஆட்சி ஒய இருந்த சமயம். சாது முரண்டினால் காடு கொள்ளாது என்பார்கள்; பொறுமையாக இருந்த வீரமல்லனுக்கும் ஒருநாள் ஆத்திரம் வந்தது. மதுரைச் சீமையில் வேறு வகையான தொல்லைகளுக்கு இலக்காகியிருந்த மங்கம்மாள் ஆட்சியின் துணையை அப்போது எதிர்பார்க்க விரும்பவில்லை அவன்.

வீரமல்லன் ஒருநாள் துணிந்து தனி ஆளாக நத்தம்பட்டி ஜமீன் மாளிகைக்குச் சென்றான்; ஜமீன்தாரைச் சந்திக்க வந்திருப்பதாகச் சொல்லி அனுப்பினான்.