பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / மூவரை வென்றான் 243

‘எப்படியும் வீரமல்லன் இனாம் கிராமத்தைப் பறி கொடுத்துவிட்டுத் தோற்றுச் சந்நியாசியாகப் போவதைத் தவிர வேறு வழியில்லை' என்றெண்ணி இறுமாந்து கிடந்தார் ஜமீன்தார் வீரமருதுத் தேவர். ‘மூன்று பேரில் யாராவது ஒருவர் எல்லைக்குள் நுழைந்தாலும் வெற்றி நமக்குத்தானே?’ என்பதே அவருடைய இறுமாப்புக்குக் காரணமாக இருந்தது. ஆனால் வீரமல்லன் தம்மைவிடச் சாமர்த்தியமாக நினைத்துச் சாமர்த்தியமாகச் செயலாற்றத் தெரிந்தவன் என்பதை அவர் மறந்துவிட்டார்.

அப்போது மழைக்காலமாகையினால் வீரமல்லனின் கண்மாய் நிறைந்திருந்தது.

முழுமையாக இல்லாவிட்டாலும், மேற்கே அடுக்கடுக்காக இருந்த நத்தம்பட்டி ஜமீன் கண்மாய்களும் முக்கால் பகுதி நிறைந்திருந்தன. கன்னிமாலை ஆற்றிலும் சுமாராகத் தண்ணீர் ஒடிக் கொண்டிருந்தது. கன்னிமாலையாற்றைக் கடந்து வீரமல்லனின் இனாம் கிராமத்தை அடைய ஒரு பாலம் இருந்தது. ஆற்றில் பிரவாகம் அதிகமாகிவிட்டால் மேற்கேயிருந்தும் தெற்கேயிருந்தும் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுவிடும். வீரமல்லனின் கண்மாய்க்கு வடிகால் வடபக்கம் இருந்தது. வடிகாலை உடைத்து விட்டுவிட்டால் வடக்கேயும் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுவிடும். மூன்று திசையையும் விட்டால் கிழக்கே கூடி ஒசூர் ஒரு வழியாகத்தான் வர முடியும்.

என்ன நோக்கத்தோடு செய்தானோ தெரியவில்லை? கிழக்கே கிராமத்து எல்லையை வளைத்து இரண்டடி உயரத்திற்குக் காய்ந்த விறகுகள், சுள்ளிகள், இலை தழைகள், வைக்கோல் இவைகளைக் குவித்து வைத்திருந்தான் வீரமல்லன். அது ஒரு குட்டிச் சுவர்போலக் கிழக்கே கிராமத்தைச் சுற்றி அமைந்திருந்தது.

பந்தய நாளில் போட்டிக்குரிய இரவு நேரம் வந்தது. வீரமல்லனின் ஏற்பாடுகள் எல்லாம் கமுக்கமாகவும் இரகசியமாகவும் தந்திரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. அங்கங்கே காரியங்கள் நடக்க வேண்டிய இடங்களிலெல்லாம் அவனுடைய ஆட்கள் மறைந்து பதுங்கியிருந்தனர். இரவு ஏழு நாழிகையாயிற்று.

தெற்கே ஆற்றின் அக்கரையில் வீரமருதுத் தேவர் ஜமீன் ஆட்களை ஆயுதபாணிகளாக வைத்துக் கொண்டு காத்திருந்தார். மேற்கே, தேவதானம் ஜமீன்தாரும், வடக்கே சாப்டூர் ஜமீன்தாரும் சரியாக அதே நேரத்திற்குத் தயாராக இருந்தார்கள். வீரமல்லனின் இனாம் கிராமத்தின் எல்லைக்குள் பாய மூன்று திசைகளிலும் ஜமீன் புலிகள் தயாராக நின்று கொண்டிருந்தன! ஏழரை நாழிகை ஆகவேண்டியதுதான்! அதற்காகவே அவர்கள் காத்திருந்தனர்.

சரியாக ஏழேகால் நாழிகை ஆயிற்று. மூன்று திசைகளிலும் யாரும் எதிர்பாராத திடீர் மாறுதல் நிகழ்ந்தன. ஜமீன் புலிகளைத் திடுக்கிடச் செய்த மாறுதல்கள் அவை.

தெற்கே நந்தம்பட்டியையும் வீரமல்லனின் கிராமத்தையும் இணைத்த பாலம் நடுவே உடைக்கப்பட்டது. அதே சமயம் மேற்கே ஜமீனுக்குச் சொந்தமான மூன்று