பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

"நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம், கமலீ? எனக்குப் புரியலையே?’ என்று தெரியாதது போல் கேட்பேன்.

"ஐயோ, மாமாவே! நீங்கள் சுத்த அசடாயிருக்கிறீர்களே. அதெல்லாம் சினிமாப் பேரு மாமா அந்தப்படங்கள் ஒடுகிற ஊருக்கெல்லாம் அப்பா போயிருக்கிறார் என்று அர்த்தம்' என்பாள் கமலி.

கமலிக்கு அம்மா இறந்து போய் நாலைந்து மாதங்கள் கூட ஆகவில்லை. அம்மா இருந்தபோது கமலி நான்காம் வகுப்பிலோ என்னவோ, படித்துக் கொண்டிருந்தாள். தாய் போனதும் படிப்பு அரைகுறையாக நின்று விட்டது. படிப்பு நின்று விட்டாலும் அந்த வயதில் அம்மாதிரி ஒரு பெண் குழந்தைக்குச் சூடிகை, வக்கணைப் பேச்சு, விவாத முறை எல்லாம் இருப்பது ஆச்சரியம். வயதுக்கு மீறின. பேச்செல்லாம் கமலியின் வாயிலிருந்து வரும் சில சமயங்களில், "மாமா! உங்கள் வீட்டு ராமுவைக் கொஞ்சம் வாயை அடக்கிப் பேசச் சொல்லுங்கள். எனக்குக் கோபம் வரும் அப்புறம். காலித்தனமாகப் பேசறான்.”

"அப்படி என்ன பேசினான், கமலீ?”

"நீ படிப்பை நிறுத்தினது நல்லதாகப் போச்சு, பொம்பளைக்கெல்லாம் படிப்பு வராது என்று என்கிட்டேயே வந்து துணிச்சலாகச் சொல்கிறான், மாமா!

“ஏ அப்பா!

இந்த வார்த்தைகளை என்னிடம் சொல்லி என்ன பயன்? ராமுவைப் பற்றிப்புகார் செய்யும் போதுதான் கமலியின் முகத்தில் எவ்வளவு கோபம்? உதடு கோணிக் கொண்டு போக விம்மலும், விசும்பலுமாக அவள் இருந்த கோலத்தைப் பார்த்தால் நான் சமாதானப்படுத்தாவிட்டால் அழுது விடுவாள் போலிருந்தது.

“அவன் சொன்னதிலே எது காலித்தனம், கமலீ?”

“போ, மாமா! நீ வேண்டுமென்றே தூண்டித் தூண்டிக் கேட்கிறே. உனக்கு ஒண்ணும் தெரியாதோ? பொம்பளை என்று சொல்றானே! அப்படி அவன் சொல்லலாமோ?”

“அடே தேவலையே! வேறே எப்படிச் சொல்ல வேண்டும், கமலி?”

“பெண்கள், மாதர்கள் என்று சொல்லணும் மாமா! முகத்தில் உறுதி ஒளிர உலகத்துப் பெண் குலத்தின் தன்மானமெல்லாம் தன் பொறுப்பில் பாதுகாக்கப்படுவது போல் ஆவேசத்தோடு சொன்னாள் அந்த மழலை திருந்தாத சிறுமி. மற்றச் சமயங்களில் நீங்கள், உங்களை என்று பேசும் சிறுமி கோபம் வந்துவிட்டால் என்னை, நீ உன்னை என்று ஒருமையில் பேச ஆரம்பித்து விடுவாள்.

“கமலீ! 'பொம்பளை' என்று சொன்னால் குற்றமா?”

“அதென்னமோ! சொல்லப்படாது. சொன்னால் எனக்குக் கோவம் வரும்”

"கோவம் வந்தால் என்ன செய்வாய்?”