பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / அருமை அம்மாவுக்கு * 247

“அழுவேன்.”

அழகான கவிக்குப் பொருள் காண்பதைப் போலவே, குழந்தைகளின் மனத்தைப் புரிந்து கொள்ள முயல்வதிலும் ஒரு தெய்வீக இன்பம் கிடைக்கிறது.

“அடே! ராமு இங்கே வா..இனிமேல் கமலியைப் 'பொம்பளை'ன்னு சொன்னால் முதுகுத் தோலை உரித்து விடுவேன்” என்று என் பையனை உடனே கூப்பிட்டுக் கண்டித்தேன். கமலியின் முன்னிலையிலேயே ராமுவைக் கூப்பிட்டுக் கண்டித்ததில் அவளுக்குப் பரம திருப்தி. ஆனால், ராமு திரும்பவும் அவளை வம்புக்கு இழுத்து விட்டான்.

“மகாராணி கமலிதேவி அவர்களே! இனி அங்ங்னம் தங்களைப் பேசேன்” என்று நாடக பாணியில் அவன் வணங்கியபோது மறுபடியும் அவளுக்குக் கோபம் வந்துவிட்டது.

“பாருங்க மாமா..! உங்க முன்னேயே இப்படிச் சினிமாவிலே பேசற மாதிரிப் பேசறான்.”

“தடிக்கழுதை! போடா உள்ளே போய் ஏதாவது படி” என்று நான் பையனை அதட்டி உள்ளே துரத்தினேன்.

‘மாமா! இந்தக் காலத்து "ஆம்பிளைப் பையன்களுக்கு' எதுவருதோ வரலையோ, இந்த மாதிரி வசனம் பேசமட்டும் வருகிறது.”

“அடி சக்கை நூறு வயதுக் கிழவி மாதிரிப் பேசுகிறாயே! நீ எந்தக் காலத்துப் பெண்? நீயும் இந்தக் காலத்துப் பெண்தானே?”

கமலி பதில் சொல்லத் தெரியாமல் விழித்தாள்.

உள்ளே படிக்கப் போன என் பையன் அடிபட்ட புலிபோல் சீறிக் கொண்டு வெளியே ஓடிவந்தான்.

"அப்பா அவளை விடாதே அப்பா. அவள் மட்டும் இப்போ ‘ஆம்பிளை' என்று சொன்னாளே. சொல்லலாமோ? கேளப்பா அவளை”

ராமு சண்டைக்குப் பிள்ளையார் சுழி போட்டுக்கொண்டு வந்தான். எனக்கும் அவன் கேள்வி நியாயமாகவே பட்டது.

“அவன் கேட்பது நியாயந்தானே கமலீ. அவன் உன்னைப் 'பொம்பளை' என்று சொல்லக் கூடாதென்கிறாய். நீ மட்டும் பையன்களை "ஆம்பிளை' என்று சொல்லலாமா?”

கமலியின் கன்னங்களில் ஆப்பிள் பழ ஒளி வழிந்தது. அவள் பதில் சொல்லாமல் வெட்கித் தலை குனிந்தாள்.

“என்ன கமலீ! பதிலைக் காணோம்!

“தெரியாமற் சொல்லி விட்டேன் மாமா. ஏதோ வாயில் தவறி வந்து விட்டது. இனிமேல் "ஆம்பளை' என்று சொல்லப்படாது.”