முதல் தொகுதி / ஏணி ★ 23
செய்வோம், அது எல்லோரும் ஒன்றாக இருப்பதற்காக.. என்பதே அவன் நிர்மாண கோஷமாக மாறியது. கிராமவாசிகள் அனைவரும் ஒன்றாயினர்.
இரண்டு மூன்று வருஷங்களில் கிராமம் புதிய ஒளியுடன் மலர்ந்தது. இந்த சாதனை கண்டு யாவரும் வியந்தனர். அரசியல்வாதிகள் புதுமைக் கண்களுடன் பார்த்தனர். ஒவ்வொரு கிராமத்தையும் இந்த முறையில் ஒன்றுபடுத்த வேண்டும். நமது சமுதாய வாழ்வைக் காட்ட வேண்டும் என்ற பிரசாரம் பத்திரிகைகளின் வாயிலாக வலுத்தது. அநேகப் பத்திரிகைகள் அவன் உருவத்தை முகப்புப் படமாகப் போட்டன. அந்தக் கிராம வளர்ச்சியைப் பற்றிப் பத்தி பத்தியாகக் கட்டுரைகள் எழுதின.
“இதை எப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டவர்களுக்கு அவன் அளித்த விடை இவ்வளவுதான். “உண்மை என் மூலதனம், அதுதான் வித்து. தன்னலமற்ற என் மனம், இதன் வளர்ச்சிக்கான நீர்... உரமோ... உழைப்புத்தான்.”
★★★
திடீரென்று ஒரு நாள் கணபதி அவன் முன் நின்றான். அவன் கண்களில் அசாதாரண வெறுப்பும் தோல்வியின் அலுப்பும் வழிந்துகொண்டிருந்தன. ராமு அவனை ஆர்வத்துடன் வரவேற்று அமரச் சொன்னான். கணபதியின் உருவத்திலே ஒரு புதிய மாற்றம் இருந்தது. எவ்வளவுக்கெவ்வளவு அலுப்புடனும் ஏக்கத்துடனும் அவன் காணப்பட்டானோ அவ்வளவுக்கவ்வளவு அழகுடன் தளதளப்பாக இருந்தான். அவன் உடலில் ஒரு பொன்நிறம் ஊறி இருந்தது. அதை எடுத்துக் காட்டும் படியாக அழகான சில்க் உடைகளை அணிந்து கொண்டிருந்தான். விரல்களிலே வைரமும், பச்சையும், நீலமும் பதித்த மோதிரங்கள். இடது கையில் வைரங்கள் இழைத்த சங்கிலியில் மாட்டிய ‘ரிஸ்ட் வாட்ச்’.
ராமு ஆச்சர்யத்துடன் கேட்டான்."காலத்தின் நெஞ்சிலே காலை வைத்து நடக்கக் கற்றுக் கொண்டாயா?"என்று.
கணபதி சொல்லத் தொடங்கினான், “ராமு... தோல்விகளிலே மனம் உடைந்து போன நான், என்னுடைய உயர்ந்த உள்ளத்தைப் பணவெறிக்கு அடிமைப் படுத்தினேன். என் லட்சியங்களை எட்டிப் பிடிக்கப் பணம் ஒன்றே குறுக்குப் பாதை என்று உறுதியாக நம்பினேன். ஆனால் ஏமாந்தேன். எவ்வளவுக்கெவ்வளவு நான் பொருளைக் குவித்துக் கொண்டேபோனேனோ அவ்வளவுக்கவ்வளவு என் ஆசையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. என் லட்சியங்கள் எப்போதோ குழந்தைப் பருவத்தில் கண்ட காலைக் கனவுகளாக மங்கி மறைந்து போயின.
"ஐயோ. ராமு. நீங்கள் அளித்த ஒவ்வொரு போதனையையும் மறந்தேன் நான். அறிவை நட வேண்டிய உள்ளத்திலே ஆசைகளை நட்டேன். தூய்மை துளிர்க்க வேண்டிய இடத்திலே காமக்கணைகள் படை எடுக்க விட்டேன். உள்ளத்தை மெருகேற்றுவதற்குப் பதிலாக உடலுக்கு அழகூட்ட மருந்துகள் வாங்கினேன். மக்கள் நலன் பெற எண்ணுவதற்குப் பதிலாக மோகக் களி ஆட்டங்களில் கிடைக்கும் இன்பத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். என்ன சொல்ல? பாவியானேன்!