பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

இவ்வாறு கூறிக்கொண்டே குனிந்த தலை நிமிராமல் ஓடி விட்டாள் கமலி, தரையில் கால்கள் பாவாமல் துள்ளித்துள்ளிப் பாய்வது அவளுக்கென்றே அமைந்த ஒரு நடை கமலி நடந்து வரும்போது பல நிறமும், பல மணமுமுள்ள பூக்களெல்லாம் ஒன்றுபட்டுக் குழந்தை என்ற ஒரு பெருமலராகி என்னை நோக்கி அசைந்தாடி வருவதுபோல் எனக்கு ஒரு பிரமை உண்டாகும்.

னக்கு ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் உத்தியோகம். இரயிலில் ஊர் ஊராகத் தபால் வண்டிக்குள் பயணம் செய்து கடிதங்களைப் பிரிக்கும் வேலை. தொடர்ந்தாற் போல் சில நாட்கள் வேலைக்குப் போனால் சில நாட்கள் ஒய்வு கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் ஒய்வு நாட்களில் என் வீட்டின் பின்கட்டில் குடியிருக்கும் கமலி என்ற பெண் குழந்தையோடு வம்பு பேசுவது எனக்குப் பிடித்தமான காரியம். ஆயிரம் புத்தகங்களைப் படித்தாலும் தெரிந்த கொள்ள முடியாத தூய எண்ணங்கள் குழந்தையின் கண்களிலும், சிரிப்பிலும், திருந்தாத பேச்சிலும் இருப்பதாக எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. கமலி எனது இந்த நம்பிக்கையின் உறைவிடமாக இருந்தாள்.

ஒரு நாள் அதுவரையில் கேட்காத புதுக் கேள்வி ஒன்றைக் கமலி என்னிடம் கேட்டாள்:

"மாமா! நீங்க தபால் கடிதாசுகளை ஒவ்வொரு ஊருக்கும் இரயில்லே கொண்டுபோகிற உத்தியோகமா பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

"ஆமாம்! உனக்கு யார் சொன்னார்கள், என் உத்தியோகத்தைப் பற்றி?”

“ராமு அப்பாவுக்கு என்ன வேலை' என்று எங்க அப்பாவிடம் கேட்டேன். அவர்தான் சொன்னார்.”

"அப்படியா?”

"மாமா! யார் கடிதாசு போட்டாலும் நீங்க கொண்டு போய்க் கொடுப்பீங்களோ?"

"தாராளமாகக் கொடுப்பேன்.”

“நான் போட்டால் கூடவா?”

“நீ யாருக்குக் கடுதாசு போடணும், கமலீ?”

“அதெல்லாம் உங்களுக்கு என்ன கேள்வி? நான் ஒருத்தருக்கு இரகசியமா ஒண்ணு எழுதிப் போடணும். போட்டால் போய்ச் சேருமா, இல்லையா? அதை மட்டும் நீங்க சொன்னால் போதும்.”

எனக்குச் சிரிப்பு வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு கமலிக்குச் சரியாக உட்கார்ந்து கொண்டு பேசினேன்.

"கமலீ! நீ சொல்லாவிட்டால் எனக்குத் தெரியாமலா போய் விடும்? கடிதத்தை எழுதி என் கையில்தானே கொடுப்பாய்? அப்போது நான் படித்து விடுவேனே!”

"ஆசையைப் பாரு! நான் 'கார்டி'லே எழுதிக் குடுத்தால்தானே நீங்க படிக்க முடியும்? கவரிலே எழுதி ஒட்டித்தானே குடுப்பேன்.”