பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


மாணலான சிறு பிள்ளைக் கையெழுத்துக்களால், அருமை அம்மாவுக்கு என்று மட்டும் உறையின் மேல் எழுதியிருந்தது.

“அசடே' என்று வாய்க்குள் என் நாக்கு மெல்ல அசைந்தது. கவரைப் பிரித்தேன். உள்ளேயும் அதே சிறு பிள்ளைக் கையெழுத்தில் தாறுமாறாக ஏதோ கிறுக்தி வைத்திருந்தாள் கமலி! நெஞ்சில் பொங்கும் சோகக் கிளர்ச்சியும், ஆவலும் என்னை அதைப் படிக்குமாறு துண்டின. எழுத்துக் கூட்டிப் பிழைகளை நீக்கிப் படிப்பதே கஷ்டமாக இருந்தது. ஆனாலும் பொறுமையோடு படித்தேன்.

“அருமை அம்மாவுக்குக் கமலி எழுதிக் கொள்வது என்னவென்றால், நீ போய் ரொம்ப நாட்களாயிற்று. இன்று வரையில் உன்னிடமிருந்து ஒரு கடிதாசும் கிடையாது. உன்னைப் பற்றி அப்பாவைக் கேட்டாலும் பதில் பேசமாட்டேங்கறார். பாட்டியைக் கேட்டா ஒண்னும் பதில் சொல்லாமே அழ ஆரம்பிச்சுடறா.

“அன்னிக்கிச் சாயங்காலம் நான் பள்ளிக்கூடம் விட்டு வரதுக்கு முன்னால் சிவப்பா ஒரு கார் - ஆம்புலன்ஸ்காராமே; உன்னை அது வந்து ஏத்திண்டு போனதைப் பார்த்ததாகத் தபால் மாமா வீட்டு ராமு சொல்றான். எனக்கு ஒண்னும் புரியவேயில்லை. நீ எப்போ வருவே? எங்கே போயிருக்கிறே? யாரைக் கேட்டாலும் தெரியலே. மேல் வீட்டுப் பிச்சி இருக்காளே, கோண வாயி.... அவ வந்து ஒரு நாள், 'உங்கம்மா செத்துப் போயிட்டாடி’ன்னு என்கிட்டச் சொன்னா எனக்கானா ஒரே கோவமா வந்தது. 'பளீர்’னு ஒரு அறை அவள் கன்னத்திலே விட்டேன் பாரு, அப்புறம் மூணு நாளைக்கு என் கூட அவ பேசவேயில்லை.

“பாட்டிக்குக் கண்ணே சரியாகத் தெரியலே. அவ சமைச்சுப் போடற சோறு வாயிலே வைக்க விளங்கலே. அப்பா முக்கால்வாசி நாள் ஊர் சுத்தப் போயிடறார். எனக்குத்தான் பொழுதே போகலை. பள்ளிக்கூடமும் நிறுத்தியாச்சு. உனக்குப் புதுப் பாப்பா பொறக்கப் போறதுன்னுதானே நீ ஆஸ்பத்திரிக்குப் போனே? இன்னும் பொறக்கலியாம்மா? எப்ப வருவே? நீ வரும்போது புதுப் பாப்பாவோடதானே வருவே?

“ராமு இருக்கான் பாரு அம்மா, அவன் 'பொம்பளைக்கெல்லாம் படிப்பு வராது’ன்னான். எனக்குப் பொறுக்கல்லே. . “பொம்பளை'ன்னு சொல்லப்படாது என்று அவன் அப்பாகிட்டப் போயிச் சண்டை பிடிச்சேன். அவர் தான். அந்த மாமாவை நீ பார்த்திருக்கிறாயே, ரொம்ப நல்லவர். அவர் ராமுவைக் கூப்பிட்டுக் கண்டிச்சார்.

"இன்னொரு ரகசியம் உனக்குச் சொல்லிடனும் அம்மா பாட்டி இல்லை, பாட்டி - அவ வந்து ஒரு நாள் ஒரு சங்கதி சொன்னாள்:

“கமலீ சீக்கிரம் உனக்கு ஒரு புது அம்மா வந்திடுவா, அப்புறம் முன்னைப்போல நீ தினம் பள்ளிக்கூடம் போகலாம். பூ வைத்துத் தலையைப் பின்னிக்கலாம். புது அம்மா கிட்டச் சமர்த்தா இருப்பியோ, மாட்டியோ?” அப்படீன்னு பாட்டிகேட்டாள்.