பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

சூசை பாதிரியாரிடம் தன் நோக்கத்தைக் கூறினான்.

“அதைப் பற்றிப் பின்னால் யோசித்துக் கொள்ளலாம். இப்போதைக்கு நீ போய்ப் பார்த்து விட்டு வா”

சகரியாஸ் பாதிரியார் சிரித்துக் கொண்டேகூறினார். சூசை பெருமூச்சு விட்டான்.

டானியலுக்கு இரவல் கொடுத்திருந்த வலையைத் திரும்ப வாங்கிப் பத்திரமாகக் குடிசைக்குள் வைத்துப் பூட்டி விட்டுச் சூசை புறப்படும் போது மாலை மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது. நாகர்கோவிலுக்கு வந்து வேறு பஸ் மாறிப் பாளையங்கோட்டையை அடைந்தபோது இரவு ஒன்பது மணி.

விடுதியில் பேரப் பிள்ளையாண்டான் தூங்கிப் போயிருந்தான். அவன் தூக்கத்தைக்கெடுத்து எழுப்பித்தன் வரவைப் புலப்படுத்தச் சூசைக்கு விருப்பமில்லை. மட்டிப்பழம் கொண்டு வந்திருக்கிறேனென்பது தெரிந்தால் பயல் இப்போதே எழுந்துவிடுவான். அந்த வாழைப் பழத்தின்மேல் பையனுக்கு அத்தனை ஆசை!

சூசையும் அங்கேயே விடுதியில் பையனுக்குத் தாத்தாவைப் பார்த்ததில் மகிழ்ச்சி பிடிபடவில்லை. மட்டிப் பழத்தை ஆவல் தீரச் சாப்பிட்டான்.

“தாத்தா! நான் எப்ப சமுத்திரம் பார்க்கிறது? நீ என்னைக் கூட்டிக்கொண்டு போய் காட்ட மாட்டியா?” என்று பையன் கேட்டபோது, அப்போதே அவனைக் கூட்டிக் கொண்டு போய்ச் சமுத்திரத்தைக் காட்டிவிட வேண்டும் போல் ஆசை துடித்தது சூசைக்கு. சகரியாஸ் பாதிரியார் என்ன சொல்வாரோ என்று பயந்து ஆசையை அடக்கிக் கொண்டான்.

“தாத்தா சமுத்திரம் எவ்வளவு பெரிசா இருக்கும்?”

“ரொம்பப் பெரிசா இருக்கும் கண்ணு!”

“தாமிரபருணி நதியைப் போலவா?”

"இல்லேடா, அதெல்லாம் விடப் பெரிசு!’

“நயினா குளம் போலவா?”

"ஊஹும் எல்லாத்தையும் விடப்பெரிசு”சிறுவன்தான் காணாத சமுத்திரத்தைத் தான் கண்ட ஆறு குளங்களை வைத்து அனுமானிக்க முயன்றான்.

"நீ சமுத்திரத்திலே ரொம்ப துரம் போய் மீன் பிடிப்பியாமே தாத்தா? உனக்குப் பயமாயிருக்காதா?” .”

"பழகினாப் பயமாயிருக்காது. உனக்குக்கூட வந்துவிடும். நீயும் நாளைக்கு அதெல்லாம் பழகிக்கனும்” .

"ஐயையோ! நான் மாட்டேன் தாத்தா. சுறாமீன், முதலை, திமிங்கலம் எல்லாம் கடலில் இருக்கும்னு பாடப் புத்தகத்திலே போட்டிருக்கே?”

“இருந்தா என்ன? அவை நம்மை ஒன்னும் பண்ணாது.”