பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34. தன்மானம்

காற்றில் மிதந்து வரும் மோகினி போல் அழகாக அசைந்து திரும்பி வந்து நின்றது ‘பிளிமத்’ கார். அறைக்குள் கையொடிந்த நாற்காலியில் உட்கார்ந்து தெருவையும், அதற்கப்பால் ஆகாய வெளியையும், வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஏகாம்பரம் திகைப்போடு எழுந்திருந்து வாசலுக்கு வந்தான். அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. பரமேசுவரா மில்லின் உரிமையாளர் திருச்சிற்றம்பலம் காரிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார். திறந்த உடம்போடு அவர் முன் தோன்றக் கூசிய ஏகாம்பரம் விறுட்டென்று உள்ளே திரும்பிப் போய் அழுக்கா, கந்தலா என்று ஆராயாமல் கைக்குக் கிடைத்த ஒரு துண்டை எடுத்துப் போர்த்திக் கொண்டு திரும்பினான். அவன் திரும்புவதற்குள் திருச்சிற்றம்பலம் வாசலுக்கு வந்து படியேறி விட்டார்.

“வாங்க... ஏது இப்படி...?”

“எல்லாம் உங்களைப் பார்த்திட்டுப் போகலாமென்றுதான்...”

“அடடே! ஒரு வார்த்தை சொல்லியனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே...?”

திருச்சிற்றம்பலத்தை மரியாதையாகத் தனது அறைக்குள் அழைத்துச் சென்றான் ஏகாம்பரம். உட்காருவதற்கு நாற்காலியை எடுத்துப் போட்டான். திருச்சிற்றம்பலம் உட்கார மறுத்து விட்டார். “இல்லை! நீங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள் ஏகாம்பரம்! நான் இப்படி இருந்து கொள்கிறேன்” என்று விநயமாகப் பணிவோடு கூறிய திருச்சிற்றம்பலம் சிரித்துக் கொண்டே ஜன்னல் விளிம்பில் சாய்ந்தாற் போல் உட்கார்ந்து கொண்டார்.

வாசலில் பெரிய கார் வந்து நிற்பதைக் கண்டு வீட்டுக்குள்ளிருந்து திருமதி ஏகாம்பரமும், குழந்தைகளும் மருண்டு வெளியே எட்டிப் பார்த்தனர். வெளியே காரைச் சுற்றி வீட்டு வாயிலில் அக்கம் பக்கத்துக் குழந்தைகள் வியப்போடு கூடிப் பார்த்துக் கொண்டிருந்தன. கிழிசல் ஜிப்பாவும், கந்தல் புத்தகங்களுமாக அப்பாவி போல் நடமாடிக் கொண்டிருக்கும் ஏகாம்பரத்தின் வீடு தேடி அவ்வளவு அழகான புதிய கார் வந்து நின்றால் அது அந்தப் பேட்டையே ஆச்சரியப்பட வேண்டிய காரியம்தானே? அந்தக் காரும் அதற்குரியவரும் அவன் வீட்டு வாயிலைத் தேடிக் கொண்டு வந்ததால் அவனுடைய கெளரவமே திடீரென்று உயர்ந்து விட்டதாக அந்தப் பேட்டைவாசிகளுக்கு ஒரு பிரமை. அதுவும் தவிரத் தேடி வந்திருக்கிற திருச்சிற்றம்பலம் இலேசான பேர் வழியில்லையே? பெரிய மில்லுக்கு உரிமையாளர். நிறையப் படித்தவர். வருகிற நகரசபைத் தேர்தலில் கவுன்சிலராக வெற்றி பெற்று, பின்பு அவரே சேர்மனாக வரலாமென்றும் ஊரில் பேச்சு நிலவியது.