பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி நிறை காக்கும் காப்பு * 281

“இங்கே போட்டாத் தூக்கித் தெருவாசல்லே எறிஞ்சிடுவேன். தெரியுமில்லே. அந்தப் பெண்ணின் கண்களில் சினத்தின் ஆணவம் பொங்கியது.

முத்தழகுக்கு ஆண் பிள்ளையின் தன்மானம் கொதித்தது. அவள் பெண் புலியாக இருக்கலாம். வீரப்பமல்லுக்காரரின் திமிர்பிடித்த மகளாயிருக்கலாம். ஆனால், அவன் ஆண் பூனையல்லவே? அவனும் ஆண்பிள்ளைச் சிங்கம்தானே? பட்டணத்துக் கல்லூரியில் 'ஆனர்ஸ்' கடைசி வருடம் எழுதிவிட்டு முதல் வகுப்புத் தேர்ச்சியை நம்பிக்கொண்டு வந்திருக்கிறவனாயிற்றே. அவனுடைய வெள்ளையுடைக்கும் நாகரிகத் தோற்றத்துக்கும் கொஞ்சமாவது மதிப்புக் கொடுத்துப் பேச வேண்டாமா அந்தப் பெண்!

“நான் இங்கேதான் கழற்றிப் போடுவேன்; உன்னால் முடிந்ததைச் செய்து கொள்.” - முத்தழகு திண்ணையிலேயே செருப்பைக் கழற்றிப் போட்டான்.

"செய்து கொள்ளலாந்தானே?”

“ஆகா முடிந்தால் - தாராளமாக.” அவள் குபீரென்று கதவிடுக்கிலிருந்து ஒரு நீண்ட சிலம்பக் கழியை உருவினாள். நிலைப்படிக்கு அந்தப்புறமிருந்தே கழியில் இரண்டு செருப்புக்களையும் கோத்து தெருவை நோக்கி ஓங்கி வீசினாள். நடுத்தெருவில் மழை பெய்து சேறாகியிருந்த அளற்றுக் குழியில் போய்ச் 'சொத்'தென்று விழுந்தன. அந்தப் புது பாதரட்சைகள். '‘போய் எடுத்துக் கழுவிக்கிட்டுப்போங்க” என்று சொல்லி அலட்சியமாகச் சிரித்தாள் அவள்.

“என்ன திமிர் உனக்கு!” என்று அடிபட்ட புலிபோல் சீறிக் கொண்டு பாய்ந்தான் முத்தழகு.

“சும்மா நில்லுங்க அப்படியே. இது வீரப்ப மல்லுக்காரர் மகள். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. கிட்ட வந்தால் ஆம்பிள்ளைங்கிற மானம் போயிடும். செருப்புக் கிடக்கிற இடத்திலே நீங்களும் கிடப்பீங்க. செருப்போட உடம்பையும் கழுவிட்டுப் போகனும் சிலம்பக் கழியை இரண்டு கைகளாலும் குறுக்கே பிடித்து மறித்துக் கொண்டு காளி மாதிரி நிமிர்ந்து நின்றாள் அந்த முரட்டுப் பெண். ஆண்பிள்ளை அடிக்கக் கையை ஓங்கிக் கொண்டு வருகிறானே என்ற பயம்கூடவா ஒரு பெண்ணுக்கு இராது!

"நீ என் அருகில்கூட நெருங்க முடியாது ஊதித் தள்ளிவிடுவேன் ஊதி” என்கிற மாதிரி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சிலம்பக் கழியோடு நிற்கிற பெண்ணைப் பார்த்தால் யாருக்குத்தான் பயமாக இருக்காது?

சும்மா அரட்டிச் சீறிக் கொண்டு பாய்ந்ததுதான் மிச்சம் முத்தழகு ஒன்றும் செய்யவில்லை. ஒன்றும் செய்ய முடியாது. பெண் பிள்ளையை அடித்தாலும் அவமானம் அடி வாங்கினாலோ அதைவிட படு அவமானம் பெண்ணின் உடம்பும் ஆணின் மதர்ப்புமாக வீறு கொண்டு நின்ற அந்தப் பெண் பிள்ளையைப் பார்த்தால்