பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. தெய்வம் எங்கே?

மாலை நேரம். நண்பர். அழகனைப் பார்த்து வரலாம் என்று பூங்குளம் கிராமத்திற்குச் சென்றேன். நண்பர் கிராமப் புனரமைப்பு வேலையில் பங்கு கொண்டு பெரிதும் உழைத்தவாறு இருந்தார். வேலை முடிந்ததும் ஓய்வு நாடி சோலைப்புறம் வந்தார். சந்தித்தேன். “பொய்யா மொழியார் எங்கே?” என்றேன்.

“சிறுவர்களோடு செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார்” என்றார்.

“தளர்ந்த உடலாயிற்றே, தாங்குமா?’ என்றேன்.

“முடிந்த வரையில் உழைக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தை அவர் எப்பொழுதும் செயலில் கடைப்பிடிப்பவர்” என்றார். இதைக் கேட்டதும் நான் பொய்யா மொழியாரின் இனிய குணங்களை, இலட்சியக் கொள்கைகளை எண்ணி வியந்தவாறு சிறிது நேரம் இருந்தேன். அழகன் வியர்வை உலர உலாவிக் கொண்டிருந்தார்.

பொய்யா மொழியார் - பெரிய புலவர். ஆண்டிலே பழுத்து அனுபவத்தில் கனிந்தவர். சுருங்கச் சொன்னால் கறைபடாத வாழ்வு வாழக் கூடியவர். “எல்லா இன்பங்களும் இங்கே இந்த உலகத்தில்தான் இருக்கின்றன” என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டு அந்த இன்பங்களையெல்லாம் மக்கள் பெற வேண்டும் என்பதற்காக கிராமங்கள் தோறும் இளைஞர்களோடு புனரமைப்பு வேலையில் ஈடுபட்டு மக்கள் வாழ்வில் நலங்காணத் துடிப்பவர். அரசாங்க உதவியோ, அன்பர்களின் பொருள் உதவியோ இல்லாமல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு புனரமைப்புத் தொழிலை நடத்தி வந்தார். அந்தத் தொண்டர் படையிலேதான் என் நண்பர் அழகன் இருந்தார்.

“அழகன் தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் போகலாமா? எனக்கு அதன் நிர்மாண அழகை, சிற்ப சித்திர வேலைப்பாடுகளைக் கண்டு மகிழ பல நாளாக ஆவல். உங்களை அழைத்துப் போகலாம் என்று தான் வந்தேன்” என்றேன்.

“வருந்துகிறேன் வளவன், எனக்கு இப்பொழுது ஒய்வில்லை” என்றார்.

“உயிர் பெறும் சித்திரங்களும், உணர்வை அள்ளும் ஓவியங்களும் நிறைந்த கலைக் கோயிலை, தலை நிமிர்ந்து நிற்கும் கோபுரம் காட்டும் தமிழரின் தலை சிறந்த கலைத் திறனைக் கண்டு மகிழ ஆசை இல்லையா அழகன்”

“இல்லை வளவா இல்லவே இல்லை. அங்கே கலைஞன் கல்லை தன் கைத்திறத்தால் அழகுறச் செதுக்கி உயிர் உள்ள உருவம்போல அமைத்திருக்கிறான்.