பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



ஆனால் இங்கே காலம் உயிர் உள்ள உருவங்களை உதிர வாய்க்கால் ஒடும் உடல்களை பசி, பிணி என்ற உளிகளால் அங்க அழகுகளையெல்லாம் சிதைத்து உயிரைப் போக்கிக் கொண்டிருக்கையில் கலையை, கைத்திறத்தை கற்பனை உயர்வைத் தமிழனின் தனிவீரத்தை, தலைசிறந்த பண்புகளைக் கண்டு மகிழ்ந்து இன்புற்றிருக்கும் நேரமா இது? கலை வேண்டியதுதான்! ஆனால் எப்பொழுது? உண்டு உடுத்த பிறகு உல்லாசமாக இருப்பதற்கும், வாழ்வு கசக்காமல் இருப்பதற்கும் தான் கலையும் அதன் குழந்தைகளான சிற்ப சித்திரங்களும்.

“பசி.ஏழைகளின் சிறுகுடலைப் பெருகுடல் விழுங்கிக் கொண்டிருக்கிறது.இந்தச் சமயத்தில் பெரிய கோவிலைக் கண்டு, அது காட்டும் கலைக் கண்காட்சியை, காவியப் படப்பிடிப்பை, இராசராசன் கண்ட கற்பனைக் கனவு, நனவாக உருவாகி உயர்ந்த விதத்தை அந்த எழிற்கோவிலிலே இன்ப நடனம் புரியும் இதிகாசச் சிற்பங்களையெல்லாம் கண்டு இன்புற முடியுமா வளவன்?

“பெரியகோவில் - பெருமையில் மட்டும் அல்ல! உருவத்திலும் உயரத்திலும் பெரியது. அதனால்தான் அங்கே ஆயிரத்தெட்டு சிவலிங்கங்கள் இருக்கின்றன! அவைகளுக்கெல்லாம் அந்திமகால பூசை நடக்கிறது. பாதாதி சேகமாக நெய்யும் பாலும் வழிந்தோடுகிறது. அதைப் பார்த்து கடவுளின்பால் பக்தர்கள் கொண்டிருக்கும் தெய்வீக அன்பை என்னால் நினைக்கவே முடியாது.நினைத்துப் பாராட்ட என் நாக்கு மறுத்துவிடும். ஆனால் என் நினைவெல்லாம் எங்கிருக்கும் தெரியுமா? பூங்குளம் கிராமத்தில், பொற்கலசமில்லாத என் கோவிலில் நெய்யையும் பாலையும் நினைத்தறியாத நடமாடும் தெய்வங்களை வழிபட்டு நிற்கும். சுவாமி விவேகானந்தர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

“ஏழைகள்தான் நான் வணங்கும் கடவுள்” என்கிறார். அதுமட்டுமா? கடவுளைத் தேடி எங்கே செல்கிறீர்கள்? ஏழைகள், துன்பப்படுவோர், பலவீனர்கள் எல்லோரும் கடவுள்கள் இல்லையா? அவர்களை ஏன் நீங்கள் முதலில் தொழக்கூடாது' என்கிறார்.

“காந்தியார் கண்ட முடிவு என்ன தெரியுமா? கடவுள் தெய்வ லோகத்திலும் இல்லை, பாதாள லோகத்திலும் இல்லை. ஒவ்வொரு மனிதனிடத்திலும்தான் குடிகொண்டிருக்கிறார். அதனால்தான் மனித வர்க்கத்திற்குச் சேவை செய்வதன் மூலமாக நான் கடவுளைக் காண முயன்றுகொண்டிருக்கிறேன்” என்றார். “ஒரு பெரிய விரிவுரை நடத்தி முடித்தார் அழகன்.அப்பொழுது பொய்யாமொழியார் செடிகளுக்கு நிரூற்றிவிட்டு திருக்குறள் வகுப்பு நடத்தப் போய்க் கொண்டிருந்தார்.

“வணக்கம்” என்றேன்.

"வாழ்க’ என்று கூறிவிட்டுச் சென்றார்.நானும் நண்பரிடம் விடைபெற்று அறை நோக்கி வந்து கொண்டிருந்தேன். தூரத்தில் எங்கோ ஆலய மணி அடிக்கும் ஒசை கேட்டுக் கொண்டிருந்தது. என் உள்ளம் ‘தெய்வம் எங்கே?’ என்ற வினாவை எழுப்பி விடை காணத் தவித்துக் கொண்டிருந்தது.

(தமிழ்ப் பொழில், செப். 1954 - மார்ச் 1955)