பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி ஆலமரம் * 319


“தாத்தா. சொல்லித் தர மாட்டீங்களா?”

“கட்டாயம் சொல்லித் தருகிறேனடா குழந்தை! உனக்குச் சொல்லித் தராமல் வேறு யாருக்கடா சொல்லித் தரப் போகிறேன்? எழுபத்திரண்டு வருடங்களாக இப்படி ஒரு தாகத்தைத் தான் இந்தப் பரம்பரையில் தேடிக் கொண்டிருந்தேனடா குழந்தை! இப்படி என் அருகில் வா. தேசிகருக்கு மெய் மயிர் சிலிர்த்து விழிகளில் ஆனந்தக் கண்ணிர் அரும்பியது.

பையன் அருகில் வந்தான். தாமரைப் பூப்போல் சிவந்த அந்தச் சிறுவனின் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார் அவர்.

“குழந்தை! முதலில் நிகண்டு மனப்பாடம் செய்யவேண்டும். கீழ்வரிசையில் எட்டாவது ஏடு சூடாமணி நிகண்டு - அதை எடு, இன்று புதன்கிழமை, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது. இப்போதே ஆரம்பித்து விடலாம்.” பையன் நிகண்டை எடுப்பதற்காக எழுந்தான்.

“ஆலமரம் அழியாது! அழியவில்லை. புதிது புதிதாக விழுதுகளை ஊன்றிப் பரம்பரையாக வளரும். இங்கேயும் இந்தப் பரம்பரை அழியாது. ஒரு புதிய விழுது ஊன்றிவிட்டது.” என்று வாய்க்குள் முணுமுணுத்தார் கிழவர்.

(நாடக விழா மலர், பம்பாய்த் தமிழ்ச் சங்கம், 1959)