பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40. வேப்பம் பழம்

கிழக்கு வானத்தில் பகல் பூத்துக் கொண்டிருந்த நேரம். மண்ணுலகத்து இன்பமெல்லாம் ஒன்று சேர்ந்து காற்றாய் வீசுவது போல் வேப்பமரத்துக் காற்று வீசிக் கொண்டிருந்தது. காகம் கரையும் ஒலி, மேல் வீட்டுப் பாகவதர் பூபாளம் பாடும் அழகு, பக்கத்து வீட்டு மாட்டுக் கொட்டத்தில் பால் கறக்கும் ஒலி, தெரு வாசலில் சாணம் தெளிக்கும் ஓசை, இடையிடையே வாசலில் கோலம் போடும் பெண் கரங்களின் வளைக் குலுங்கல், கோவில் விசுவ ரூப மணியோசை, காற்றில் மிதந்து வரும் நாதம்.

அடாடா! அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் வைகறைப் போது எவ்வளவு அழகாயிருக்கிறது? உழவு மாடு ஓட்டிக் கொண்டு போகும் உழவன், காய்கறிக்காரன், தயிர்க்காரி, பால்காரன் என்று தெருவில் மனிதர்கள் நடமாடுகிற உயிர்த் துடிப்பில் எத்தனை எழில்? கிழக்கே தெரு முடியும் இடத்துக்கு அப்பால் தென்னை மரக் கூட்டத்தில் சூரியோதயத்தில் ஒளி பரவும் அழகைப் பார்த்துக் கொண்டே வேப்ப மரத்தடியில் நின்றிருந்தார் பேராசிரியர் சிற்சபேசன். கிராமத்தின் அழகிலும், தூய்மையும், அமைதியும் நிறைந்த அந்தக் காலை நேரத்துச் சூழ்நிலையிலும் தோய்ந்து நின்ற அவர் மனத்தில் வளமான சிந்தனைகள் உண்டாயின.

பின்னால் யாரோ நடந்து வருகிற ஓசை கேட்டுத் திரும்பினார் சிற்சபேசன். கையில் கூடையும், விளக்குமாறுமாக ஒரு சிறுமி வந்து கொண்டிருந்தாள். அவர் நின்று கொண்டிருந்த வேப்ப மரத்தடியை நோக்கித்தான் வருவதாகத் தோன்றியது.

“மாமா...! நீங்கள்தான் இந்த வீட்டுக்குப் புதிதாகக் குடி வந்திருப்பதாகச் சொன்னாங்க. நான் வீடெல்லாம் தெளித்துப் பெருக்கிச் சுத்தமா வைத்துக் கொள்வேன். வீட்டிலே சமையலுக்கு உதவியா எடுபிடிக் காரியமெல்லாம் செய்து கொடுப்பேன். சம்பளம்னு பெரிசா ஒண்ணும் கேட்க மாட்டேன். ஏதோ உங்களாலே முடிஞ்சதைக் கொடுத்தால் திருப்தியா வாங்கிக்குவேன். எனக்கு அப்பா அம்மா யாரும் இல்லை. ஒரு தம்பி இருக்கான். எலிமெண்டரி ஸ்கூல்லே அவன் மூணாங் கிளாஸ் படிக்கிறான். நான் உழைச்சுத்தான் காப்பாற்றியாகணும்.”

சிற்பசேனுக்கு முன்னால் வந்து நின்று கொண்டு பணிவான குரலில் கூறினாள் அந்தச் சிறுமி. அழுக்குச் சிற்றாடையும் கிழிந்த தாவணியுமாக ஏழ்மைக் கோலத்தில் நின்ற அந்தச் சிறுமியை நன்றாய்ப் பார்த்தார் சிற்சபேசன்.

பதின்மூன்று அல்லது பதினாலு வயது மதிக்கலாம். வயதுக்கு மீறின வளர்த்தி, குச்சி போல் வளர்ந்திருந்தாள். எதற்கோ ஏங்கிக் கொண்டே வளர்ந்தது போன்ற முகத் தோற்றம். ஆனாலும் பார்த்தவுடன் மனத்தில் பதிந்து விடக் கூடிய ஒரு சோகக்