பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

எல்லோருடைய கண்களும் ஆவலோடு கடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருள் என்னவென்று தேடின.

அவன் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தது வேறொன்றுமில்லை. பூமாலையின் பிணம் கான்ஸ்டபிள்கள் தண்ணீரில் இருந்தவனுக்கு உதவியாகக் கைகொடுத்துத் தூக்கினார்கள். பூமாலையின் சவம் படகுக்கு வந்தது.

என்ன ஆச்சரியம்! சவத்தின் வலது கையில் அந்த வலம்புரிச் சங்கு இறுகப் பிடித்துக் கொள்ளப்பட்டிருந்தது!

போலீஸ் இன்ஸ்பெக்டரும் பரமசிவம் பிள்ளையும் தங்களையும் மறந்து 'ஆ' வென்று அதிசயத்தால் கூவினர்!

"சங்கை எடுத்துக் கொண்டு வருகிறபோது மூச்சுத் தாங்காமல் இறந்திருக்கணுமுங்க” மற்றவன் முணுமுணுத்தான். பரமசிவம் பிள்ளை பிணத்தின் வலது கையிலிருந்து சிரமப் பட்டு அதைப் பிரித்து எடுத்தார்.

பூமாலை இறந்ததைப்பற்றிய நினைப்பே பரம்சிவம் பிள்ளையின் மனத்தை விட்டு மறைந்தது. சரித்திரப் புகழ் பெற்றதும் பல நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றக் கூடிய அபூர்வப் பொருளுமான வலம்புரிச் சங்கைப் பார்த்ததும் அவர் மெய் மறந்து போனார். இத்தகைய தெய்வீக மதிப்பு வாய்ந்த வலம்புரிச் சங்கு யாருக்கேனும் எளிதில் கிடைத்துவிடுமா? ஜன்ம ஜன்மாந்திரங்களில் செய்த நல்வினையின் பயனால் கண்டிராக்டர் பரமசிவம் பிள்ளைக்கு அது கிட்டியது. அதுவும் அந்த வலம்புரிச்சங்கு கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி இருந்தது. அவருக்கு எதிர்பாராமல் கிடைத்தது ஒன்று; ஒருமுறை கிடைத்துக் கைநழுவிப் போன பொருள் மாண்டவன் மீண்டது போல மீண்டும் அவரது சாகசத்தினால் கிடைத்தது. ஆக இரண்டு. இந்த மகிழ்ச்சி மிகுதியில் அவர் திணறியதில் வியப்பு என்ன இருக்கிறது?

வலம்புரிச் சங்கு அற்புதமாகத்தான் இருந்தது. "லக்ஷக்கணக்கிலென்ன? கோடி ரூபாய் கூடப் பெறும் இது!” என்றார் இன்ஸ்பெக்டர். வலம்புரிச் சங்கை வைத்திருப்பவர்களுக்கு அஷ்டஐசுவரியமும் பெருகுமென்கிறார்களே? அது நிஜம் தானா? நிஜமானால் அந்தப் பாவி பூமாலை ஏன் மூச்சுத் திணறிப் போய் இறந்தான்? அதைப்பற்றிச் சிந்தித்துப் பார்க்க யாருக்கும் அவகாசம் இருக்கவில்லை.!

(1960-க்கு முன்)