பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / தகுதியும் தனி மனிதனும் * 345

வந்து சேர்ந்தன. ஆமாம்! பழஞ்சுவடி சேகரித்து வெளியிடும் ஸ்தாபனத் தலைவர்தான் எழுதியிருந்தார்.

...........

"அன்புடையீர்! நீங்கள் சேகரித்து அனுப்பிய பிரபந்தச் சுவடிகளை அச்சிட்டு வெளியிட்டுள்ளோம். அவ்வளவும் நல்ல கவிதா சிருஷ்டிகள். மாதிரிப்புத்தகம் ஒன்று இதனுடன் அனுப்பியிருக்கிறோம். விரைவில் தங்களுக்குச் சேரவேண்டிய தொகையை நிர்ணயித்துச் 'செக்' மூலம் அனுப்புகிறோம்.

வணக்கம்”

கடிதத்திலிருந்த 'நீங்கள் சேகரித்து அனுப்பிய' என்ற வார்த்தைகள் அவருடைய நெஞ்சின் ஆழத்தில் அம்புகள் போலப் பாய்ந்தன. அந்தக் கடிதத்தையும் அதை எழுதியவரையும் கோபித்துக் கொண்டு என்ன பயன்? அவர் எந்த ஏட்டுச் சுவடியிலும் ஊர் பேர் எதுவுமே எழுதாமல், செய்யுளையும் பிரபந்தத்தின் பெயரையும் தானே எழுதியிருந்தார்.

சுற்றியிருந்த புத்தகத்தைப் பிரித்தார். சிராப் பள்ளிக் குறவஞ்சி முதல் அவர் அனுப்பியிருந்த அத்தனை பிரபந்தங்களும் நல்ல முறையில் அச்சிடப்பட்டிருந்தன. கொட்டையெழுத்துக்களில் முதல் இரண்டு மூன்று பக்கங்களில் காணப்பட்ட 'நூலாராய்ச்சி’ என்ற பகுதி அவர் கவனத்தை இழுத்தது. யாரோ ஒரு சர்வகலாசாலையில் முதன்மை வகிக்கும் நபராம். 'கேசவேசுவரனார் எம்.எ, எம்.லிட், பி.எச்டி' 'அவர்கள் கருணை கூர்ந்து எழுதியுதவிய ஆராய்ச்சியுரை என்று கீழே போட்டிருந்தது. என்ன எழுதியிருக்கிறார் என்று பார்த்த அவர் திடுக்கிட்டார் அடுத்த கணம்.

“இந்நூல் தொகுதியில் அடங்கியுள்ள நிகரற்ற பிரபந்தங்களை இயற்றிய கவிஞர் திலகம் ஏறக்குறை மூன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவராக இருக்கவேண்டும். இதில் பயின்றுள்ள சில சொல் வழக்குகளையும் பிரயோகங்களையும் நோக்குமிடத்து இன்னும் முற்பட்ட காலத்தவராகக்கூட இவரைக் கருதலாம். சில கற்பனைகளையும் வருணனைகளையும் நுணுகிப் பார்க்குங்கால் 'கோலாகலக் கோவை' முதலிய பிரபந்தங்களை இயற்றிய குமரசேனக் கவிராயரும் இவரும் ஒருவரோ? என்று ஐயுற நேரிடுகிறது. நாட்டு வருணனை நகர வருணனைப் பகுதிகளில் செல்வத்தைப் பற்றி அபரிமிதமான கருத்துக்களைச் சொல்லுதல் கொண்டு சொந்த வாழ்க்கையில் இவரே ஒரு பெரிய செல்வந்தராக இருந்திருக்கலாம் என்று எண்ண முடிகிறது.” படித்துக் கொண்டே வந்தவர் மனவேதனையும் மறந்து கடகடவென்று வாய் விட்டுச்சிரித்தார், இந்த வாக்கியத்தைப்படித்தும் இன்னும் என்னென்னவோ வளைத்து எழுதியிருந்தார். ஆராய்ச்சியை படித்துப் பார்க்கப்போகிறேன் என்று அந்த அப்பாவி ஆராய்ச்சியாளர் எங்கே நினைத்திருக்கப் போகிறார்? கவிராயர் புத்தகத்தை அப்படியே ஒரு மூலையில் வீசி எறிந்தார். அவருக்கு அழுவதாசிரிப்பதா என்று தெரியவில்லை.

"நான் தான் ஐயா இவற்றை எழுதியவன்” என்று ஏட்டுச் சுவடிகளோடு அவரே பட்டினத்துக்குப் போயிருந்தால் ஒரு பயல் திரும்பிப் பார்த்திருக்க மாட்டான்.