பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45. மண் குதிரை

ண்ணன் சிரித்தார். பல் தேய்க்கிற பிரஷ்ஷின் நுனியிலிருந்து பறித்து ஒட்ட வைத்த மாதிரி நரைத்த நறுக்கு மீசை. அதற்குக் கீழே வெற்றிலைக் காவி ஏறிய உதடுகளின் நடுவே இரண்டு தங்கப் பற்கள் உட்பட எல்லாப் பற்களும் தெரிகிறாற் போல ஒரு வியாபாரச் சிரிப்பு. யார், யாரைச் சந்தித்தாலும் அந்த விநாடி வரை அவர்களுக்காகவே தாம் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போல் எண்ணச் செய்து விடுகிற முகத் தோற்றமும், பேச்சும், குழைவும், அண்ணனுக்கு உண்டு; அண்ணனுக்கு மட்டும்தான் உண்டு!

அண்ணன் வியாபாரி. தொழிலால் மட்டும் அன்று, பேச்சு, சிரிப்பு நட்பு, பழக்க வழக்கம் எல்லாவற்றிலும் அவர் வியாபாரி. வியாபாரம்தான் அண்ணனுக்கு வாழ்க்கை அதாவது வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியும் வியாபாரத்துக்காக என்று நினைக்கிறவர் அண்ணன். கடை வாசலில் அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே பத்து மணியிலிருந்து ஏழரை மணிக்குள் உலகத்தை விற்றுக் கொள்முதல் பண்ணி விடுகிற சாமர்த்தியமுள்ளவர் அண்ணன்.

“அடேய் பையா, ஐயா வந்திருக்காங்க பார், ஒரு நாற்காலி கொண்டு வந்து போடு.”

நாற்காலி வந்தது. உட்கார்ந்தேன்.

“வெற்றிலை போடுறீங்களா...? காப்பி வாங்கி வரச் சொல்லட்டுமா?” என்ற வார்த்தைகளும் அண்ணன் வாயிலிருந்து வந்தன. யார் வந்தாலும் வெற்றிலையும், காப்பியும்.வாங்கி வரத் துடித்துக் கொண்டிருப்பது போல் அண்ணன் ஆர்வத்தோடு விசாரித்து விடுவார். ஆனால் அண்ணனுடைய ஆர்வமெல்லாம் விசாரிப்பதோடு சரி. இந்த விநாடி வரை யாருக்கும் அண்ணன் எதுவும் வாங்கித் தந்தது இல்லை என்று நாற்பதாயிரம் கோயில்களில் சத்தியம் செய்து கூறத் தயார். அண்ணனுடைய குழைவெல்லாம் விசாரிப்பில் மட்டும் தான் உண்டு. கடை நிறையக் கூட்டம் பொங்கி வழியும். அண்ணனுக்குப் பட்டுப் புடவை வியாபாரம்; கடையைக் கவர்ச்சியாக வைத்துக் கொள்வதில் அண்ணன் கை தேர்ந்தவர். மூலைக்கு மூலை மின் விசிறிகள் சுழல, ஒளி விளக்குகள் மின்ன, அந்தக் கையகல இடத்தை மதன் மாளிகையாக்கி யிருந்தார். கடைக்குள் எந்த நேரமும் ஊதுவத்தி மணக்கும். ஆம்! அண்ணனுக்கு வத்தி வைப்பதில் எப்போதுமே ஆசை அதிகம். -

கடையிலுள்ள நயம் பட்டுப் புடவைகள் மட்டுமல்ல, அண்ணனுடைய பேச்சும் வழுவழுவென்றுதான் இருக்கும். கடையில் வேலை பார்க்கும் பையன்களைப் பம்பரமாக ஆட்டி வைத்து விடுவார் அண்ணன். நிற்கவும் விட மாட்டார்; உட்காரவும் விட மாட்டார்.