பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முதல் தொகுதி / மண் குதிரை * 359

'பெரிய மனிதன்' ஆவது என்றால் இலேசுப்பட்ட காரியமா அது? எத்தனையோ தெரிந்தவற்றைத் தெரியாதது போலவும், தெரியாதவற்றைத் தெரிந்தது போலவும் காட்டிக் கொண்டுதான் ஆகவேண்டியிருக்கும். யாராவது பெரிய மனிதர்கள் தேடி வந்துவிட்டால் அவர்களை 'ஆகா ஒகோ' என்று கொண்டாடுவார். அவர்கள் தலை கடை வாயிற்படியிலிருந்து மறைந்த அடுத்த கணத்தில், அதே ஆட்களைத் துக்கி எறிந்து கேவலமாகப் பேசத் தொடங்கிவிடுவார். இந்த மாதிரிப் புறம் பேசுகிற குணம் அண்ணனுக்கு மிக அதிகம்.

“இந்த நாட்டிலே அத்தனை பேரும் அயாக்கியங்க. அத்தனை பேரும் நன்றி கெட்டவங்க! இதோ இப்ப மந்திரியா இருக்காரே. கே.எஸ். ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்திரண்டிலே காலிலே ஆபரேஷன் ஆகி ஆஸ்பத்திரியிலே கிடந்தாரு, ஒரு பயல் ஏனின்னு கேட்கவில்லை. நம்ம கடையிலேருந்து டிபன் செட்டிலே சோறு அனுப்பினேன். இன்றைக்கு என்னடான்னா அவரு நம்மைப் பார்த்தால் பேசவே மாட்டேங்கறாரு” என்று திடீரென்று ஆவேசத்தோடு சொல்வார்.

அவர் சொல்கிற எதையும் நான் அப்படியே நம்பி விடுவதில்லை. தாம் சோறு போட்டதாகவும் புடவை கடன் கொடுத்ததாகவும், அண்ணன் வாய் கூசாமல் யார் யாரைக் கூறுகிறாரோ அவர்களெல்லாம் சொந்தத்தில் ஒன்றுக்கும் வக்கில்லாதவர்களல்லர். செல்வமும், செல்வாக்கும் செழிப்பாக உள்ளவர்கள். அண்ணன் பக்கத்தில்கூட நெருங்க முடியாது. 'உலகமே தம் ஒருவருடைய தயவில்லாமல் வாழ முடியாது’ என்று பாமரர்களை நம்ப வைப்பதற்காக அண்ணன் இந்தப் பொய்மையை மேற்கொண்டிருந்தார். எப்படியோ ஏற்பட்டு நிலைத்துவிட்ட பழக்கத்தையும், நட்பையும் விட்டொழிக்க முடியாமல் அண்ணனுடைய பொய் புரட்டுக்களைப் பொறுத்துக்கொண்டு பேசாமலிருப்பது வேடிக்கையாகிவிட்டது எனக்கு. என்னைப் பற்றியோ, என்னுடைய செயல்களைப்பற்றியோ, அண்ணன் யாரிடமும் புறம் பேசவோ, கேவலமாகச் சொல்லவோ மாட்டார் என்பதில் மட்டும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.நான் அண்ணனிடம் அருவருப்போ, அச்சமோ கொள்ளாமல், பழகியதற்கு இந்த நம்பிக்கையும் ஒரு காரணம். வேறு அளவு கடந்த பற்று எதுவும் என்கு அண்ணனிடமில்லை. வியாபாரி என்னும் தத்துவமே தனிப்பட்டது. தான் செய்கிற அத்தனை தவறுகளும் அறமாகப்படும்.அதே தவறுகளை மற்றொருவன் செய்வதற்கு மனம் பொறுக்கமாட்டான் வியாபாரி. தன்னைத் தவிர உலகத்திலுள்ள மற்ற அனைவரும் நாணயமாக வாழ வேண்டுமென்று ஆசைப் படுகிறவர் அண்ணன். ஆனால் உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் தம்மைப் போலவே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அண்ணனுக்குத் தெரியுமா?

திடீரென்று ஒருநாள் ஏதாவதொரு சங்க ஆண்டு விழாவுக்கு வசூல் என்று இன்னும் நாலு பேரையும் தூக்கிப் போட்டுக் கொண்டு "வசூல் நோட்டோடு’ கிளம்பிவிடுவார் அண்ணன். அவருக்கு எந்தச் சமயத்தில் எந்த வேலை வந்து சேருமென்று சொல்ல முடியாது.