பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி மண் குதிரை * 363

தெரியப்படாதுங்கிற மாதிரி செய்துவிடுவேன். நானும் சொல்றதில்லே; வாங்கிக்கிறவனையும் சொல்ல விடறதில்லை.”

சிலைடுகள் காண்பித்து முடிந்து விளக்குகள் எரிந்தன. அந்தத் தியேட்டரில் மட்டும் அப்படி ஒரு வழக்கம். சிலைடுகள் காண்பித்த பின்தான் இடைவேளை,

அண்ணன் எழுந்திருந்தவர் - நான் பின் வரிசையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டார். அவர் முகம் பேயறை வாங்கியதுபோல் சுருங்கிச் சிறுத்தது. அவருடனிருந்தவரும் என்னைப் பார்த்துவிட்டார்.அண்ணன் தயங்கிநின்றதெல்லாம் சில வினாடிகள்தான். உடனே சமாளித்துக் கொண்டார். வியாபாரிக்கு எந்த நிலையிலும் சமாளிக்கத் தெரியும்.

“வாங்க இப்பக்கூட இவரு உங்க கதையைப் பற்றித்தான் புகழ்ந்து சொல்லிக்கிட்டிருந்தாரு நான் ரொம்பச் சந்தோஷப்பட்டேன்!” அண்ணன் நெகிழ்ந்தார்.

எனக்கோ உள்ளும், புறமும் ஒரே கொதிப்பு.நீண்டநாட்களாக இருந்த நம்பிக்கை உடைந்த எரிச்சல் ஒருபுறம்: 'நமக்கும் அண்ணன் அண்ணன்தான்” என்று அறிந்த குமுறல் மறுபுறம்.

“வாங்க இப்படி இங்கே உட்காரலாம். இவருக்கு உங்க கதைன்னா கொள்ளை ஆசை.”

“என்ன எழுதிப்பிட்டேன் அப்பிடிப் பிரமாதமா? எல்லாம் மகாலட்சுமி ஜவுளி ஸ்டோர் முதலாளி கொடுத்த பிச்சைக் காசு இல்லையா?” என்று சாட்டையை ஓங்கிச் சுழற்றிக் கொடுத்தேன். அண்ணன் அசந்துபோய் நின்று விட்டார். எனக்கு அத்தனை கோபமும் வரமுடியும் என்பது அண்ணனுக்கு அப்போதுதான் தெரிந்திருக்க முடியும். அண்ணன் தலையைக் குனிந்துவிட்டார். சுற்றிச் சிறு கூட்டம் வேறு கூடிவிட்டது.

“கவனமா இருங்க. இன்னொரு தடவை இப்படிப் பேசினதாக எங்கேயாவது கேட்டேனோ, கன்னத்தைப் பேர்த்திடுவேன். ஏதோ பழகின பழக்கத்தை விட முடியாமே உங்க கடைக்கு வந்து போயிட்டிருந்தா, என்ன வேணுமானாலும் பேசிடலாங்கிற நெனைப்பா..?”

அண்ணன் தலை இன்னும் குனிந்தது. என் தலை மேலும் நிமிர்ந்தது. துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு தியேட்டரிலிருந்து பாதிப் படத்தைப் பார்க்காமலே வெளியேறினேன்.அதனாலென்ன? எத்தனையோ காரியத்தைப் பாதிக்கு மேல் செய்ய முடிவதில்லை.

அண்ணன் மண் குதிரை! என்னுடைய பயமுறுத்தல் அவரை ஒன்றும் செய்யப்போவதில்லை. மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடக்க முடியாது! நான் கடந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தது பிரமை அல்லது என்னுடைய சொந்த முட்டாள்தனம் என்று வைத்துக் கொண்டாலும் எனக்கு மறுப்பில்லை!.

(காலைக்கதிர், ஜனவரி, 1960)