பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / மண்ணும் மாடியும் * 367

ஒடிப்போய் அங்கிருந்து கீழே பார்த்தான்; கொட்டுகிற மழையில் நின்று கொண்டு பொன்னி அலறிக் கொண்டிருந்தாள்:

"ஐயா! கொஞ்சம் கீழே வந்து பாருங்க. அப்பாரு முகத்தைப் பார்த்தாப் பயமாயிருக்குது. மூச்சு இழைக்குது. உடம்பு தூக்கித் தூக்கிப் போடுது. பேச்சு வரலே. எனக்குப் பயமா." பரிபூரணம் ஓடினான். மாடிப்படியிறங்கும் கதவு வெளிப்பக்கம் தள்ள வரவில்லை. அழுத்தித் தள்ளினான். திறக்கவில்லை. மழையில் சிக்கிப் பிடித்துக் கொண்டிருக்குமோ என்று இழுத்தும் ஆட்டி உலுக்கியும் பார்த்தான். கதவு திறக்கவே இல்லை. சாவி நுழைகிற கதவுத் துளையில் உள்ளே இருந்து எடுத்துக் கொள்கிற மாதிரி ஒரு காதிதச் சுருள் சொருகியிருந்தது. பரிபூரணம் அதை எடுத்துப் பிரித்தான்.

“நாளைக்குள் பாட்டு ரெடி'யாகி விட வேண்டும். நீங்கள் வெளியே எங்கும் அலைந்து நேரத்தை வீணாக்கி விடக் கூடாதே என்று மாடிக் கதவை வெளியே பூட்டிக்கொண்டு போயிருக்கிறேன். காலையில் சந்திக்கிறேன். பாட்டுத் தயாராயிருக்கட்டும்’ என்று எழுதிக் கீழே படமுதலாளியின் கையெழுத்தும் இருந்தது. பரிபூரணம் தவித்தான். மறுபடி பால்கனிக்கு ஓடினான்.

பொன்னி கீழே மழையில் நின்று அலறிக் கொண்டிருந்தாள். "அப்பாரைச் சாகாமக் காப்பாத்துங்க ஐயா... நான் அநாதை உங்களுக்குப் புண்ணியமாப் போகும். மேலேயே நின்னு பார்த்துக்கிட்டிருக்கீங்களே ஐயா! கீழே இறங்கி வந்து பார்க்கப்படாதா?' பரிபூரணத்தின் மனம் துடித்தது.உணர்வுகள் பிறந்து உருகின. நான் மேலே இருக்கிறேன். அவள் கீழே வரச் சொல்லி அழைக்கிறாள். நடுவே கதவும் காவலும் இருக்கின்றன. நான் கீழே போகவேண்டும், முடியவில்லையே! என்று எண்ணினான்; எண்ணிக் கொதித்தான்.

அவனே தான் பாட்டு எழுதவேண்டிய படத்துக்குக் கதாநாயகன் ஆகி ஏழாவது மாடியில் நின்று தவித்தானே அந்தத் தவிப்பை இப்போது பரிபூரணமே உணர்ந்தான்.

அந்த உணர்வு வந்ததும் கவிதை வேகமும் தானாகவே வந்து விட்டது. பத்தே நிமிடங்களில் பாட்டு அற்புதமாக உருவாகி விட்டது. ‘என்னை மண்ணில் வாழவிடு! மழையில் நனைய விடு' என்று அந்தப் படத்தின் பணக்காரக் கதாநாயகன் ஏழாவது மாடியிலிருந்து கதறினானே - அந்தக் கதறலின் உருக்கமெல்லாம் எழுதிய பாட்டில் அப்படியே வந்துவிட்டது.

பாட்டை முடித்து விட்டுப் பரிபூரணம் மறுபடி பால்கனியில் போய்க் கீழே பார்த்தபோது குடிசையிலிருந்து பொன்னியின் அழுகுரல் கேட்டது.

"அப்பா! என்னை இப்படித் தனியா விட்டுட்டுப் போயிட்டீங்களே..” என்று கதறியழும் குரலைக் கேட்டான் பரிபூரணம்.

ஆம்! அவனுடைய இதயத்தில் கவிதை பிறந்த அதே நேரத்தில் குடிசையில் பொன்னியின் தந்தை இறந்துபோயிருக்க வேண்டும்.

'பொன்னீ! என்று இரைந்து கூவினான் பரிபூரணம்.