பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / ஜன்னலை மூடிவிடு * 371

"அப்பா! தூங்குகிறீர்களா?"

குயிற்குரல் அவர் செவிகளை நிறைத்துக்கொண்டு கேட்கிறது. வளை ஒலி, மல்லிகை மணம், கூறைப்புடவை மொடமொடப்பு, மணப் பெண்ணின் வாசனை. பின்னால் படுக்கையருகில் அன்னம் வந்து நின்றுகொண்டு கூப்பிடுகிறாள்! அவள் நிற்பதால் அந்த அறையே அழகாயிருக்கும் புக்ககம் புறப்படுகிறபோது அபசகுனம் மாதிரித் தன் கண்ணீரைக் காண வேண்டாமென ஒருக்களித்த படியே கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பின்பு திரும்புகிறார்.

அவளைத் திரும்பிப் பார்த்தவருக்கு மெய் சிலிர்க்கிறது. இந்தப் பெண்ணுக்கு இன்றைக்கு மட்டும் இத்தனை அழகு எங்கிருந்து புதிதாக வந்தது? புக்ககம் புறப்படுகிற காலத்தில் பெண்ணுக்கு இந்த மலர்ச்சி வருவது இயல்பா? அல்லது பெண்ணைப் பிரிந்து வெகு தூரத்துக்கு அனுப்பப் போகிறோம் என்ற தாபத்தினால் என் கண்களுக்கு மட்டும் அதிகமான அழகுகள் தெரிகின்றனவா? இதென்ன மணம்? இந்த மணம் இன்றைக்கென்று இவளுக்கு எங்கிருந்து வந்தது? இவளுடைய சரீரமே இன்று எல்லாப் பூக்களின் மணமும் கலந்து பூத்திருக்கும் பூவாக மாறியிருக்கிறதா? என்னுடைய இரத்தத்தில் அரும்பி வளர்ந்த உடலிலிருந்து இந்த மணத்தை அநுபவிக்கிறபோது ஒரு தந்தை என்கிற உறவில் எனக்கு இத்தனை பெருமிதமா?

“என்ன அப்பா இப்படிப் பார்க்கிறீர்கள்?"

“கொஞ்சம் அப்படியே நின்று கொண்டிரு, அன்னம்! உன்னை நன்றாகப் பார்த்து எப்போது நினைத்தாலும் உன் முகம் உடனே நினைவில் வருகிறாற் போல் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.”

இதைக் கேட்டு அன்னம் சிரிக்கிறாள்! இல்லை, யாரோ அவளுடைய இதழ்களின்மேல் ஜலதரங்கம் வாசிக்கிறார்கள். அன்னத்தின் கன்னத்தில் நாணம் பூக்கிறது! இல்லை. அவளுடைய கன்னங்களில் கனிகள் கணிகின்றன. வலது இடுப்பில் குடம் ஏந்தி இடை வளைய நெஞ்சும், கண்களும் வேறெங்கோ வளையச் சகுந்தலை நிற்கிற மாதிரி சித்திரச்சக்கரவர்த்தி இரவிவர்மா ஒரு படம் எழுதியிருக்கிறான். அந்தப் படத்தில் சகுந்தலை நிற்கின்ற அழகுதான் உலகத்துப் பெண் அழகின் சிகரநிலை.

அதே அழகோடு அன்னம் இப்போது மணக்கோலத்தில் சற்றே தயங்கி ஒரு பக்கம் சாய்ந்தாற்போல் நிற்கிறாள்! நிமிர்ந்து விறைப்பாக நிற்கிற பழக்கமே அவளுக்கு இல்லை.நடந்தாலும் அழகு நின்றாலும் அழகு அவளே ஒர் அழகு. அழகே அவளுக்கு ஒர் உருவம்.

மை தீட்டிய கண்கள், பூச்சூட்டிய கூந்தல், முதல்நாள் நலங்கிட்டசிவப்பு அழியாத பொன் நிறப் பாதங்கள். அக்கினியே கொழுந்து கொழுந்தாய்ப் படர்ந்து புடைவையாய் மாறி உடம்பைத் தழுவிக் கொண்டிருக்கிற மாதிரி நல்ல சிவப்பில் பட்டுப் புடவை அணிந்து கொண்டிருக்கிறாள். கால்களின் விரல்களில் வெள்ளி மெட்டி நடக்கிறபோதெல்லாம் கிணுங் கிணுங்கென்று பேசுகிற அழகு!.

“அன்னம்!:”