பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / ஜன்னலை மூடிவிடு * 373

சம்பந்திகள் வருகிறார்கள். விடைபெறுகிற சம்பிரதாயம் முடிகிறது.

“செல்லமாக வளர்ந்த பெண் பார்த்து வைத்துக் கொள்ளவேணும்”-கண்கலங்கச் சொல்லி அனுப்புகிறார். அவர் மனம் கலங்கப் பார்க்கிறார்.

எல்லோரும் வண்டி ஏறி விட்டார்கள். அவர் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அன்னம் மறுபடியும் ஓடி வருகிறாள். தனியாக அப்பாவிடம் இன்னொரு முறை சொல்லிக் கொள்ள வேண்டுமென்ற ஆசை.

"நான் போய் வரட்டுமா, அப்பா?”

இப்போது அவள் கண்களில் நீர் நிறைகிறது.

“மகராஜியாய்ப் போய்வா, அம்மா' குனிந்து வணங்கிய பெண்ணின் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் செய்கிறார். அன்னம் எழுந்து திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்துபோய் வண்டியில் ஏறிக் கொள்கிறாள். வண்டியிலிருந்து வலது கையைத் தாமரைப் பூப்போலத் தூக்கி ஆட்டுகிறாள்.

வண்டிகள் நகர்கின்றன. ஜன்னலின் வழியே தெரிந்தவை இப்போது சாலையில் திரும்பி விடுகின்றன. ஜன்னலில் காட்சிகள் மறைகின்றன.

ஜன்னல் கம்பிகளும் அவற்றினிடையே துண்டு துண்டாய் ஆகாயமும்தான் தெரிந்தன. அவருடைய இதயம் துடித்தது; தவித்தது. எல்லாமே போகிற மாதிரி அடித்துக் கொண்டது.

“மருந்து கொண்டு வரட்டுமா?” - என்று கேட்டுக் கொண்டே சமையற்காரன் அவருடைய அறைக்குள் வந்தான்.

“தவசிப்பிள்ளை இந்த ஜன்னலை மூடி விடு"- என்றார் அவர்.

"இந்த ஒரே ஜன்னல்தானுங்களே, இந்த அறைக்கு! மூடினால் காற்று வராதே!"

“முட்டாள்!. பேசாதே! உடனே மூடிவிடு. இல்லாவிட்டால் நான் செத்துப்போய் விடுவேன். என்னால் தாங்க முடியாது. மூடிவிடு” இரண்டு கைகளாலும் நெஞ்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார் அவர் சமையற்காரன் அரண்டு போனான்! உடனே ஜன்னலை இழுத்து மூடினான்.

“மருந்து கொண்டு வரட்டுங்களா?”

“எங்கிருந்து கொண்டு வருவாய்? மருந்துதான் வண்டியேறி இரயிலுக்குப் போய்விட்டதே?. அழுது கொண்டே பதிலுக்கு அவனைக் கேட்டார் அவர் அவன் விழித்தான்.

அவர் கேட்டது அவனுக்குப்புரியவில்லை.பருப்பு வெந்துவிட்டதா என்று பதம் பார்க்க உள்ளே போய்விட்டான் அவன். இங்கே இதயம் வெந்து கொண்டிருந்தது அவனுக்குப் புரியவில்லை.

(கல்கி, 19.6.1960)