பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

400 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

மூதி'ன்னாங்களே. சொல்லும்போதே பேச்சுத் தடைப்பட்டு விக்கிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டான் கண்ணன்.

காந்திமதி கழுத்தில் பொன் வார்ந்து கயிறாய் வடிந்தது போல் நெளிந்த மங்கலச் சரட்டைத் தொட்டுப்பார்த்துக் கொண்டாள். மடியில் தலையைச் சாய்த்துக் கொண்டு 'உலகமே அக்காவின் மடி மேலிருக்கிறதென்ற' நம்பிக்கையுடன் அழும் குருட்டுத் தம்பியையும் பார்த்தாள்.இரத்தத்தோடு வந்த ஒரு உறவை இழந்து இன்னொரு உறவில் கலந்துவிட இருப்பதை நினைக்கும்போது துக்கமாக இருந்தது அவளுக்கு.

'வாழ்க்கைப்பட்ட இடத்துக்குத் தம்பியையும் கூட்டிக்கொண்டுபோய் வைத்துக் கொள்கிற அளவுக்கு மாமியாரும் நாத்திமார்களும் விடுவார்களா? அப்பாவாலும் இந்தக் குருட்டுப் பிள்ளையை வைத்துக் கட்டிக் காக்க முடியாது! நானும் கூட்டிக் கொண்டுபோக முடியாது.இவனுக்கு என்ன வழி?-காந்திமதிக்குப் புரியவில்லை ஒரு வழியும்.

"அக்கா! அப்பாஎன்னைக் கோபிக்காம வெச்சுக்கமாட்டாங்க.தனியா விட்டிட்டு ஊரூராப் போயிடுவாங்க பலவேசம் மாமாவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்கலை "பொறக்கும்போதே அவிச்சிட்டுப் பொறந்தியேடா, மூதேவின்னு அறைஞ்சிட்டாரு காலைலே. ராதாவரத்து அத்தையும் என்னை வச்சுக்கிட மாட்டாங்க. நீயும் கூட்டிட்டுப் போகாட்டி நான் எங்கே அக்கா போறது?.”

என்ன பதில் சொல்லித் தம்பியை ஆற்றுவதென்றே தெரியவில்லை அவளுக்கு பையன் அழுதான்.

“அழாதேடா கண்ணு; அப்பா உனக்கு ஏதாவது வழி செய்வார்” என்றாள் காந்திமதி. கோவில்பட்டிக்கும், தூத்துக்குடிக்கும் கூப்பிடு தூரமில்லையே? நினைத்தால் வண்டி கட்டிக் கொண்டு புறப்படச் சொல்லி வந்து தம்பியைப் பார்த்துவிட்டுப் போகமுடியாதே? கோவில்பட்டியில் தான் குடியிருக்க வேண்டுமென்ற அவசியம் இனிமேல் அப்பாவுக்கு ஏது? மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி என்று சரக்குக் கொள்முதலுக்கு ஊரூராய் அலைகிறவருக்கு இந்தக் குருட்டுப் பையனை எப்படி வைத்துக் கட்டிக் காக்கிறது என்று மலைப்பாகத்தான் இருக்கும்.

காந்திமதி சாயங்காலம் அப்பாவைக் கேட்டாள்.

“காந்தீ கலியாணம் கட்டிப் புருசன் வீட்டுக்குப் போறவ இனிமே அவனைப் பத்தி நெனைச்சுக்கிட்டிருந்தா முடியுமா? எனக்குத்தான் வீட்டுலே தங்கி வச்சுக் காப்பாத்த முடியுமா? பலவேசம் ஒரு வழி சொன்னான். அப்படிச் செஞ்சிடலாமின்னு இருக்கேன்.”

“என்ன வழியப்பா அது?

“பாளையங்கோட்டையிலே ஏதோ குருடர் பள்ளிக்கூடமின்னு இருக்குதாம்மா. பலவேசமும் கூட வரேன்னிருக்கான். அங்கே கொண்டு போய்ச் சேர்த்திட்டு வந்திடலாம்னு இருக்கேன். வேறே வழி இல்லே”