பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

உட்காந்திருந்தன். மாப்பிள்ளை வீட்டு மற்ற ஆட்கள், பலவேசம், நல்ல குற்றாலம் எல்லோரும் எதிரும் புதிருமாக உட்கார்ந்திருந்தார்கள்.

முதல் முதலாக இரயிலேறி உட்கார்ந்த குதுகலத்தில் இருந்தான் கண்ணன்.

“இந்த இரயிலுங்கற வண்டி எப்படியக்கா இருக்கு? என்னாலேதான் பார்க்க முடியல்லையே! நீ சொல்லேன்.”

காந்தி தன்னால் முடிந்த மட்டும் சொன்னாள். இரயில் புறப்பட்டது. ஒவ்வொரு ஸ்டேஷன் பேராக்க் கேட்டுக் கொண்டு வந்தான் கண்ணன். குருமலை ஸ்டேஷனில் வெள்ளரிப் பிஞ்சு கூடை கூடையாக வந்தது. தம்பிக்கு வாங்கிக் கொடுத்தாள் காந்தி, கடம்பூர் வந்தது. 'போளி போளி' என்று ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ஒலித்த குரல் கண்ணன் காதில் 'கோழி' என்று விழுந்தது போலிருந்தது.

"கோழியைக் கூட ரயில் டேசன்லே விக்கிறாங்களா அக்கா?”

"கோழியில்லேடா போளின்னு ஒரு பணியாரம்” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே, போளிக்காரரைக் கூப்பிட்டு இரண்டு போளி வாங்கித் தம்பியிடம் கொடுத்தாள் காந்திமதி. ரயில் கடம்பூரை விட்டு நகர்ந்தது. மணியாச்சி நெருங்க நெருங்க அவள் மனம் துக்கமாக எதையோ உணர்ந்தது. மாப்பிள்ளை வீட்டார் தங்கள் மூட்டை முடிச்சுக்களைத் தனியே பிரித்து இறக்குவதற்குத் தயாராக வைத்துக் கொண்டனர்.

‘போய்ச் சொகமாகச் சேர்ந்ததுக்குக் கடிதாசு போடுங்க. இனிமே அவ உங்க வீட்டுப் பொண்ணு மாதிரி, பார்த்துப் பரிமளிச்சு வச்சுக்கணும். நான் வியாபாரக்கார மனுஷன் அடிக்கடிவரப்போக வாய்க்காது.” என்று விடைபெறுகிற சம்பிரதாயத்தை ஆரம்பித்தார் நல்ல குற்றாலம்.

"அம்மா, காந்தீ! நீ விவரம் தெரிஞ்ச பொண்ணு; தம்பியை நல்லாப் பாத்துக்குவோம். புகுந்த வீட்டுக்கு நல்லபடியா நடந்துக்க. நீ ஆடிக்கு வரப்போ தம்பியைப் பார்க்கலாம்” என்றார் பலவேசம்.

"அக்கா தூத்துக்குடி வந்திரிச்சா” - காதில் விழுந்த பேச்சுக்களிலிருந்து ஏதோ அநுமானம் செய்துகொண்டு தானாகக் கேட்டான் தம்பி கண்ணன்.

"இல்லே! தூத்துக்குடி இந்த லயனிலே வராது. மணியாச்சி வருது. அங்கே இறங்கி வேறே ரயில் மாறித் தூத்துக்குடிக்குப் போகணும்.”

"ஏன் மாறணும்? இந்த ரயில்லியே போனாத் தூத்துக்குடி போகாதா?”

“போகாது மணியாச்சியிலே தூத்துக்குடிக்கு வழி பிரிகிறது.”

"பாளையங்கோட்டைக்கு”

"அதுக்கு வேறே லயன், இதுக்கு வேறே லயன். இந்த வண்டி நேரே திருநெல்வேலி போகும்.நீ இதுலேயே போய்ப் பாளையங்கோட்டை போவலாம். நாங்க மட்டும் தான் இங்கே இறங்கி ரயில் மாறணும்.”