பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / வழிகள் பிரிகின்றன * 403

வண்டி மணியாச்சி ஜங்ஷனின் கலகலப்பில் கலந்து நின்றது. பார்சலுக்காக ஒலைப் பாயில் கட்டிக் கிடந்த மீன் பொதிகளின் நாற்றம் மூக்கைத் துளைத்தது. கூட்டம், பரபரப்பு, வரவேற்கும் குரல்கள், விடைகொடுக்கும் குரல்கள், அண்ணாச்சி சொகந்தானா?” என்றது போன்ற விசாரணைகள், ரயில் என்ஜின் கூவல்கள் எல்லாவற்றையும் கண்ணன் கேட்டான். உணர்ந்தான். காண முடியவில்லை.

மாப்பிள்ளை வீட்டார் மூட்டை முடிச்சுக்களை இறக்கிக் கொண்டு ஒவ்வொருவராக இறங்கினர். மரியாதைக்காகப் பலவேசமும், நல்ல குற்றாலமும் கூட இறங்கிப் பிளாட்பாரத்தில் நின்றார்கள்.

கண்களில் நீர் மல்கக் கண்ணனை ஏறிட்டு நோக்கினாள் காந்தி. அவள் இன்னும் வண்டியிலிருந்து இறங்கவில்லை. உதட்டோரம் வெள்ளரி விதையும் போளியும் பொறுக்குலர்ந்து, சாப்பிட்ட அடையாளம் தெரிய உலகத்திலுள்ள பேதைமை எல்லாம் முகம் காட்ட இரயிலில் உட்கார்ந்து கொண்டிருந்தான் அந்தக் குருட்டுத் தம்பி.

'அக்கா இதான் மணியாச்சியா? இங்கேதான் நம்ம வழி பிரியுதா?”

காந்தியின் கண்களிலிருந்து நீர் முத்துக்கள் உதிர்ந்தன.

“ஆமாடா கண்ணு! இங்கே நம்ம வழி பிரியுது! நா வரேன்; அக்காவை மறந்திடாதே. எப்பவும் உன்னையே நினைச்சிக்கிட்டிருப்பேன்.”. அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னாள் அவள்.

“நீ அழுவுறியா அக்கா?.”

“இல்லே! வரேண்டா கண்ணு.

காந்தி இறங்கிக் கணவனுக்குப் பக்கத்தில் நின்று கொண்டாள். கார்டு விசில் ஊதினார். மணி அடித்தது. பலவேசமும், நல்ல குற்றாலமும் வண்டிக்குள் ஏறிவிட்டார்கள். இரயில் நகர்ந்தது. தூத்துக்குடிக்கு வழி பிரிஞ்சிருக்கும்” என்று பையன் தனக்குள் மெல்லச்சொல்லிக் கொண்டான்.ஆம்! மணியாச்சியிலிருந்து தானே தூத்துக்குடிக்கு வழிகள் பிரிகின்றன!

(தென் மொழிகள் புத்தக டிரஸ்ட், செப்டம்பர் 1960)