பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52. புதிய ஆயுதம்

கையில் கடிகாரத்தையும், மடியில் பணத்தையும், மனத்தில் பேராசையையும் கட்டிக் கொண்டு நவநாகரிக ஆடவரும் பெண்டிரும் அந்த அகலமான வீதியில் கூட்டமாக நடமாடிக் கொண்டிருந்தனர். -

கண்ணைப் பறிக்கும் விதவிதமான மின்சார விளக்குகள், கருத்தைக் கவரும் கல்லூரிக் குமரிகளின் கூட்டம், பொருளையும் தர்மத்தையும் சேர்ந்தாற் போல் விற்றுக் காசைச் சேர்க்கும் கடைகள், டிராம், பஸ், ரிக்ஷா, ஜட்கா, டாக்ஸி - பட்டணத்து வீதிக்கு வேண்டிய எல்லாத் தகுதிகளும் அந்தத் தெருவுக்கு இருந்தன.

‘இந்த மனிதப் பயல்களுக்கு வெளிச்சம் போடுகிறவன் நான்’ என்று நிமிர்ந்து நின்று சொல்வது போல் வரிசை வரிசையாக மின்சாரக் கம்பங்கள். டெலிபோன் தூண்கள், உயரமான கட்டிடங்களின் உச்சந்தலையில் ஏறி மிதித்துக் கொண்டு நிற்கும் ரேடியோ ‘ஏரியல்’ கம்பங்கள்.

வீடுகளில்தான் எத்தனை வகை? இரண்டு மாடி, மூன்று மாடி, நான்கு மாடி - இன்னும் பல மாடிகள். எல்லாம் பிரமாதம்தான்! பட்டணமில்லையா; பிரமாதமில்லாத எதுவும்தான் பட்டணத்தில் இருக்க முடியாதே.

அதோ! அந்த ஆடம்பரமான வீதியில் கிழக்குக் கோடியிலிருந்து வரிசையாக ஏழு வீடுகள் இருக்கின்றனவே. அவற்றில் ஏழாவது வீட்டைத் தவிர மற்ற ஆறும் செல்வச் செழிப்பின் பிரதிபிம்பங்களாக நிற்கின்றன. ஏழாவது வீடு மட்டும்… பாவம்…! பெட்டி போல் ஒரு சிறிய ஓட்டடுக்கு வீடு அது! ஓடு சரிந்து விழுந்து விடுமோ என அஞ்சத்தக்கதாக இருந்தாலும், அஞ்சாமல் குடியிருப்பவனுடைய மனவலிமைக்குப் பயந்தோ என்னவோ வீடு விழாமல் நின்று கொண்டிருந்தது.

முதல் ஆறு வீடுகளில் யார் யார் குடியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா நீங்கள்? வரிசையாகச் சொல்கிறேன், கேளுங்கள்:

முதல் வீட்டில் ஒரு பிரபல சினிமா நடிகர் இருக்கிறார். வாசலில் நாலைந்து புத்தம் புதிய கார்களும், விடலைப் பிள்ளைகளும், பள்ளிச் சிறுவர்களும் கூடி நிற்பதிலிருந்தே இதை நீங்களே தெரிந்து கொண்டிருக்க வேண்டுமே? ஆமாம்! இப்போதே சொல்லி விடுகிறேன். நல்லதோ, கெட்டதோ, எதையும் பிறர் கூறாமலே அனுமானித்துத் தெரிந்து கொள்ளுகிற ஞானம் பட்டணத்துக்கு மிகவும் அவசியமான தேவை.

அந்த நடிகர் ஏராளமான படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். பழைய காலச் சரித்திரத்தில் இத்தனை போர்களில் காயம் பெற்றவர் என்பதைப் பெருமையாகச்