பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

தரையாக்கிவிடலாம்.அத்தனை பெரிய வக்கீல். கொலை செய்தவன் நிரபராதியாகவும், நிரபராதியைக் கொலை செய்தவனாகவும் மாற்றிக் கேசை ஜெயிக்க வைப்பதில் நிபுணர்.

நான்காவது வீடு ஒரு வியாபாரியுடையது. ஒரு மில்லுக்கும், இரண்டு பாங்குகளுக்கும், ஆறு கம்பெனிகளுக்கும் டைரக்டரான அந்த வியாபாரி வருடந்தோறும் இலட்சக்கணக்கில் வருமானவரி கட்டுகிறார். ஊரிலுள்ள எல்லா இலக்கியச் சங்கங்களுக்கும், மன்றங்களுக்கும், கழகங்களுக்கும், தாராளமாக நிதியுதவி செய்து கெளரவப் பாதுகாவலராய் விளங்குகிறார். ஏதாவது ஒரு மகாநாடு நடத்தச் செலவுக்குப் பணமில்லையென்றால் அவரையே தலைவராகப் போட்டு அவரிடமே மகாநாட்டுச் செலவை நிதியாக வாங்கிவிடும் தந்திரம் சில மகாநாடுகளை நடத்துகிறவர்களுக்குத் தெரிந்திருந்தது.

அந்த வியாபாரியைச் சுற்றி எப்போதும் சமயம், மதம், புலமை சம்பந்தமான ஆட்கள் கூடியிருப்பார்கள். சமயத் தலைவர்களுக்குப் பாதகாணிக்கைகளும், பொன்னாடையும், சன்மானமுமாக வியாபாரி செல்வாக்கோடு வாழ்ந்து கொண்டிருந்தார். எதிலும் குறைவில்லாத போகத்தை அனுபவிக்கக் கொடுத்து வைத்தவர் அவர் எதெதிலோ தஷிணப் பிரதேசம் வேண்டுமென்று தெரியாதவர்கள் சொல்லிக்கொண்டு கிடக்கிறார்கள். அந்த வியாபாரியினுடைய அந்தப்புரத்தில் இருக்கிறது.ஐயா தஷிணப் பிரதேசம்! புரியவில்லையா? ஒரு தெலுங்குப்பாட்டுக்காரி, ஒரு மலையாளத்து நாட்டியக்காரி, ஒரு கன்னட நடிகை இத்தனை பேரும் அவர் வீட்டில் இருந்தார்கள். 'வீட்டில் இருந்தார்கள்' என்று மொட்டையாகச் சொன்னால் என்ன அர்த்தம்? அர்த்தமாவது மண்ணாங்கட்டியாவது? அர்த்தம் சொல்லியா இதெல்லாம் புரிய வேண்டும்? அடுத்த வீட்டைப் பார்க்கலாம்.

ஐந்தாவது வீடு ஒரு காலேஜ் புரொபஸருடையது. உயரமான தோற்றமும், மூக்குக் கண்ணாடி அணிந்து அறிவொளி திகழும் முகமுமாக இவர் நடப்பதே கல்வியின் பெருமிதத்தைக் காட்டும். டக் டக் என்று பூட்ஸ் கால்கள் ஒலிக்க நடந்து மோட்டார் சைக்கிளில் ஏறி இவர் காலேஜுக்குக் கிளம்பும் அழகே அழகு. நடிகரையும், டாக்டரையும், வக்கீலையும், வியாபாரியையும் போல இவர் கொழுப்பு நிறைந்த வாழ்க்கை வாழ முடியாவிட்டாலும், போதுமான வசதிகளுடன் சுகமான வாழ்க்கை வாழ்ந்தார். சுயநலமும், உலகத்தில் சராசரி மக்களின் துயரங்களைப் பற்றிக் கவலைப்படாத திமிரும் இவரிடம் நிறைய இருந்தன.

மணிபர்ஸில் பணமிருந்து மண்டையில் மூளையில்லாத ஆட்களைப் பிடித்துச் சங்கங்களை ஆரம்பிக்கச்செய்து பொன்னாடையும், பூமாலையும் போட்டுக் கொண்டு மேடைக்கு மேடைபழம் பெருமை பேசி இன்று உள்ள ஏழைகளின் தொல்லைகளைப் பற்றியே நினைவின்றிக் கோவில் காளைபோல் சுற்றி வந்தார் இவர் கூப்பிட்டாலும், கூப்பிடாவிட்டாலும் எல்லாக் கூட்டங்களிலும் போய்ப் பேசினார். அதிகம் 'பவர்’ உள்ள லென்ஸோடு கூடிய இவரது மூக்குக் கண்ணாடியின் ஆராய்ச்சிப் பார்வையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு எல்லாம் பளிங்கு போல் தெரிந்தன.