பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி புதிய ஆயுதம் 407

ஆனால் கண்முன் பசியால் செத்துக் கொண்டிருப்பவனும், குழந்தையை விலைக்கு விற்றுக் கொண்டிருக்கும் தாயும், வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ளும் வாலிபனும், பசிக் கொடுமையால் காசு கொடுத்தவர்களுக்கெல்லாம் மனைவியாக மாறும் பெண்ணும் தெரியவேயில்லை. இவர் நன்றாக உண்டு, நன்றாக உடுத்தி, கல்லூரியில் எதிர்கால மனிதர்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

ஆறாவது வீடு அரசாங்கத்தில் பெரும் பதவி வகிக்கும் ஒரு 'கெஸ்ட்டெட்' ஆபீசருடையது. இவர் ஆங்கிலம் மளமளவென்று பேசுவார். பேச்சில் எப்போதும் அதிகார மிடுக்கு இருக்கும். வீட்டு வாசலில் பித்தளை பில்லையை மார்பில் தாங்கிய டவாலி சேவகனும், அல்சேஷியன் நாய்க்குட்டியும் நிற்பார்கள். நாய்க்கும், டவாலிக்கும் ஒரு வித்தியாசம். நாய் சமயா சமயங்களில் வீட்டு எஜமானியம்மாளின் மடியில் ஏறி உட்கார்ந்து கிளாஸ்கோ பிஸ்கோத்தைச் சாப்பிட்டுக் கொண்டே காரில் சவாரி போகும். 'டவாலி'யால் அது முடியாது.

சிவப்பு நாடாவினால் இறுக்கிக் கட்டிய பைல்களின் ஆதிக்கம் இவர் கையில்தான். வெறும் காகிதங்களோடு பழகிப் பழகி இவருடைய மனம் மரத்துப் போய்விட்டது. இவர் ஆபீசுக்குப் போகும்போது பெரிய பைகள் தைத்த கோட்டை போட்டுக்கொண்டு போவார். திரும்பிவரும்போது இரண்டு பையும் நிறைந்து கலகலக்கும். புரிகிறதா? மேலதிகாரிகளை - மந்திரிகளை சட்டசபை உறுப்பினர்களை குளிப்பாட்டிக் குல்லாப் போடுவதில் மனிதர் மகா நிபுணர். இவருடைய மனைவி எல்லாப் பொது விழாவிலும் பரிசு வழங்குவதற்குப் போவாள். இவரும் சில கூட்டங்கள், திறப்பு விழாக்களுக்குத் தலைமை வகிக்கப் போவார். டென்னிஸ்கிளப், சங்கீத சமாஜம் எல்லாவற்றிலும் இவருக்கு ஒர் முக்கிய அங்கம் உண்டு.

ஏழாவது வீடு - அந்தத் தெருவிற்கே திருஷ்டிப் பரிகாரம் போலிருந்தது. வாயிற்புறத்து இருண்ட அறையிலிருந்து யாரோ காசநோக்காட்டுக்காரன் போல லொக்கு லொக்கென்று இருமிக் கொண்டிருந்தான். இதற்கு மேல் இப்போதைக்கு அந்த வீட்டைப் பற்றி வேறொன்றும் சொல்வதற்கில்லை. பாவம்! அந்த வீட்டிலிருப்பவன் அப்பாவிப் பயல் போனால் போகிறதென்று விட்டுவிடுவோம்.

கண்ணுக்கு எட்டாத இடத்தில் பரமண்டலங்களின் மேலான மண்டலத்திலிருந்து கொண்டு உலகைப் படைத்த கடவுள் ஒருநாள் தமது அந்தரங்கக் காரியதரிசியைக் கூப்பிட்டு,

"அப்பனே! பூவுலகத்திலுள்ள நகரங்களில் இப்போது வாழ்க்கை நிலை எப்படி இருக்கின்றது? யார் யார் பணக்கஷ்டமில்லாமல் வசதியாக வாழ்கிறார்கள்? உலகில் ஒழுக்கமும், அறமும் நலிந்து மக்களுக்குச் சத்தியத்தில் நம்பிக்கை குன்றி வருவதாக நான் அறிகிறேன். உலகத்தைச் சீர்திருத்தி நன்னிலைக்குக் கொண்டு வருவதற்கு ஒரு புதிய ஆயுதம் தேவை! அதை எங்கேயிருந்து, யாருடைய கையிலிருந்து நாம் தயாரிக்கலாம்?” - என்று பரபரப்போடு கேட்டார்.

‘சுவாமி! இப்போது கிராமங்களெல்லாம் இடிந்த நலிந்து இருண்டு போய்விட்டன. நகர வாழ்க்கைதான் ஒளிபெற்று ஓங்கியிருக்கிறது. முற்காலத்தில்