பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / வேனில் மலர்கள் * 423

இருக்கும் போது கடைசியாக நான் எழுதிய கவிதையை உனக்குத் தரலாம். ஆனால், அது அறைகுறையாக இருக்கிறது. மீண்டும் அதை நிறைவாக்க என்னால் இயலாதே!

“எப்படியாவது அதை நிறைவு செய்து முடித்துக் கொடுங்களேன்” என்று சந்துருவின் வேண்டுகோளுக்குக் கவியிடமிருந்து பதில் இல்லை.

கவி கமலக்கண்ணன் விழிகளிலும் முகத்திலும் ஏக்கம் தேங்கி நிற்க மோட்டு வளையை மீண்டும் பார்த்தார். அங்கில்லாததும், எங்கிருப்பதென்று தெரியாததும், ஆனால் எங்கோ நிச்சயமாக இருப்பதுமான ஏதோ ஒன்றைத் தேடித் துழாவுகிற பார்வையாக இருந்தது அது. அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தொடர்ந்து அடுத்தடுத்து நெட்டுயிர்த்தார் கவிஞர். உதவியாசிரியர் மறுபடியும் தூண்டிக் கேட்கலானார்: “ஒரு வாரம், பத்து நாள் ஆனாலும் பரவாயில்லை. நீங்கள் அந்தக் கவிதையை முடித்துக் கொடுப்பதாக இருந்தால் நான் காத்திருந்து வாங்கிக் கொள்கிறேன்.”

“அந்தக் கவிதையை முடிக்க இப்போது என்னால் முடியுமா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது சந்துரு. அந்தக் கவிதைக்கு முதல் அளித்த சக்தியை - தூண்டுதல் தந்த சூழ்நிலையை - நான் மறுபடியும் அடைந்தால் ஒருவேளை என்னால் அதை முடிக்க இயலும். சில அழகான கண்கள், சில எழில் வாய்ந்த முகங்கள், சில அற்புதமான புன்னகைகள், சில உள்ளம் உருக்கும் காட்சிகள் இவற்றைப் பார்த்துத் தூண்டுதல் பிறக்கும்போதுதான் என் மனத்தில் கவிதைக்குரிய சொற்கள் விளைகின்றன. அல்லாத நேரங்களில் என் மனநிலம் தரிசாக வறண்டுவிடுகிறது.”

நாடெல்லாம் தெய்வமெனக் கொண்டாடும் கவி, சிறு குழந்தைபோல் வெள்ளைத்தனமாகத் தம் சொந்த ஆற்றாமையை வெளியிடுவதைக் கேட்டு மனம் உருகினார் உதவியாசிரியர். கவிஞரின் அழகிய கண்களில் எதையோ - கண், வாய், சிரிப்பு, மூக்கு முகம் என்று ஒவ்வொன்றாக நினைத்து ஒன்று சேர்த்து யாரையோ - நினைவுபடுத்திக் கொள்ளத் தவிக்கும் துடிப்புத் தெரிந்தது. ஏக்கம் சுழன்றது."என்னால் முடியாது சந்துரு நினைப்புக்குள் அநுமானம் பண்ணிக் கொணர முடியாத அழகு அது. பார்க்கும் போதுதான் என் மனம் துள்ளியது. நினைக்கும்போது வரமாட்டேனென்கிறது.”

கவிஞரின் கண்களில் நீர் மல்கிற்று. நாத் தழுதழுத்தது.

"சந்துரு!”

“உங்கள் மனம் ஏதோ கஷ்டப்படுகிறது.”

"அப்படி ஒன்றும் இல்லை, சந்துரு. ஆனால், உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். கூசாமல் பதில் செல்வாயா?”

"என்ன? கேளுங்களேன்."

“இந்த ஐம்பத்திரண்டு வயசுக் காலத்தில் எப்போதாவது ஒரு பெண்ணைப் பார்த்ததும் மனம் பித்தாகிக் கல்யாணம் பண்ணிக்கொண்டுவிட வேண்டுமென்ற துடிப்பு எனக்கு உண்டாகியிருக்குமா? உண்டாயிற்று என்றால் நம்புவார்களா?”