பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / வேனில் மலர்கள் 429

“சத்தியமாக, நீங்கள் சாயங்காலம் பாருங்களேன்.”

"அந்தக் கந்தர்வசுந்தரி எனக்குக் கவிதை தந்தவள். அவளை நான் மறுபடி காண முடிந்தால் ஒரு கவிதை என்ன? உன் ஆண்டு மலருக்கு ஒரு காவியமே எழுதித் தருகிறேன் அப்பா.

"மாலையில் தயாராக இருங்கள். வந்து அழைத்துப் போகிறேன்” என்று கூறி சந்திரசேகரன் போய்விட்டார்.

கவிஞர் மகிழ்ச்சி பொங்கும் மனநிலையோடு காத்திருந்தார். ஆறு மணிக்குச் சந்திரசேகரன் வந்து அழைத்துப் போனார். அந்த வீட்டுக் கூடத்தில் கவிஞரை உட்கார்த்தி விட்டு உள்ளே போய் அவளை அழைத்து வந்தார் உதவியாசிரியர். அதே மஞ்சள் வாயில் புடவை, வைர பேஸரியும் தோடுகளும் சேர்ந்து சிரிப்பதுபோல் இதழ்களில் சுரந்த நகை, மெட்டியும் கொலுசும் தாளமிட அன்னநடை நடந்து கவிஞருக்கு முன் வந்து கைகூப்பி வணங்கினாள் அந்தப் பெண். வணங்குமுன் கையில் இருந்த 'வேனில் மலர்கள்' புத்தகத்தை கவிஞருக்கு முன்பிருந்த மேஜையில் வைத்தாள்.

வியப்போடு கவிஞர் அதன் முதல் பக்கத்தைப் பிரித்தார். அவருடைய கையெழுத்து அன்று எழுதிக் கொடுத்தபடியே முத்து முத்தாக இருந்தது. அவள் இனிய குரலில் அவரை நலம் விசாரித்தாள்.

“பேசிக்கொண்டிருங்கள். காபி கலந்துகொண்டு வருகிறேன்” என்று கூறி அவரையும், உதவியாசிரியரையும் விட்டுவிட்டு உள்ளே மறைந்தாள். கையில் 'வேனில் மலர்களை'ப் புரட்டிக்கொண்டே சந்துருவிடம் கேள்விகள் கேட்கலானார் கவிஞர். அவர் குரலில் உல்லாச வெள்ளம்.

“சந்துரு, இந்தப் பெண் கல்லூரியில் படிக்கிறாளா?”

"படித்து முடித்துவிட்டாள்.”

"இவள் மாதிரி அழகியை நீ எங்காவது பார்த்திருக்கிறாயா சந்துரு”

“இல்லை.”

"இந்தப் பெண் உனக்கு உறவோ?”

"உறவுதான்.”

“நெருங்கிய உறவோ?”

“மிகவும் நெருங்கிய உறவு”.

சிறிது நேரம் இருவரிடையேயும் மெளனம் நிலவுகிறது. கவிஞர் கண்களில் ஒரே தாகம். அழகின் வெள்ளத்தையே கண்டு விட்டது போல் முகம் மலர்ந்திருக்கிறது அவருக்கு.

சந்துரு அவரிடம் மீண்டும் கேட்கிறார். “பாட்டை நாளைக்கே முடித்துக் கொடுத்துவிடுவீர்களா ஸார்?"