பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57. ஒரு மதிப்பீடு

ன்றைக்குக் காலையில் பத்து மணி சுமாருக்குத் திருவாளர் பொன்னம்பலம் அவர்களுடைய மனத்தில் என்ன இருந்ததென்று அனுமானம் செய்ய முயன்றால், இரண்டே இரண்டு சந்தேகங்கள் மட்டுமே இருந்தன என்பது தெளிவாகப் புலப்படும்.

அநேகமாகச் சந்தேகங்களைத் தவிர அவருடைய மனத்தில் வேறொன்றும் இருப்பதில்லை என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத முடிவானாலும், அப்போது சத்தியமாக அந்த மனத்தில் இருந்த சந்தேகங்கள் இரண்டுதான் என்பதை வரையறை செய்வது ஒன்பதே முக்கால் மணி வரை முடியாமலிருந்தது. பத்து மணிக்கு அது உறுதியாகத் தெரிந்து விட்டது.

முதலாவது சந்தேகம் : இந்த டியூஷன் வாத்தியார் நரசிம்மன் என்கிற எம்.ஏ.பி.டி. தன்னை ஏன் மதிப்பதில்லை என்பது.

இரண்டாவது சந்தேகம்: முழங்காலுக்கு மேல் மண் படிந்த வேட்டியும், வேர்வை நாறும் அழுக்கடைந்த பனியனுமாய் வெறும் பாமரனாய் நிற்கிற தோட்டக்கார முனியனை இந்த வாத்தியார் ஏன் மதித்துப் பேசுகிறான் என்பது!

இரண்டு சந்தேகங்களும் ஒரே காரணத்திலிருந்து பிறந்தவை என்றாலும், அவை ஒன்றில்லை என்பது எவ்வளவுக்கு நிச்சயமோ அவ்வளவுக்கு நிச்சயம் இரண்டுதான் என்பதும். பொன்னம்பலம் இலட்சாதிபதி. கூடிய விரைவில் கோடீஸ்வரராகிவிட முயன்று கொண்டிருப்பவர். ஆனால் இதில் ஒரே ஒரு துரதிர்ஷ்டம் செளகரியங்கள் எவ்வளவுக்கெவ்வளவு பெருகிக் கொண்டிருந்தனவோ அவ்வளவுக்கவ்வளவு அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் அவர் மனத்தில் பெருகிக் கொண்டிருந்தன. சிறிய விஷயங்களுக்காகக் கூட அவர் மனத்தை அலட்டிக் கொள்வார். அவருடைய மனம் ரொம்ப ஏழை. அவருடைய இரும்புப் பெட்டியைப் போலத் திடமாகவோ, நிறைந்தோ இருந்ததில்லை அந்த மனம்.

உலகத்தில் தன் எதிரே வந்து நிற்கிற அத்தனை பேரும் நிச்சயமாகத் தன்னை மதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர் அவர். இப்படி ஆசைப்படுகிற ஏழை மனம் உடையவர்கள் யாராயிருந்தாலும் பரிதாபத்துக்குரியவர்கள்தாம். தன் மதிப்பினாலும், தன்மானத்தினாலும், சந்தனக் கட்டைக்குள் செறிந்திருக்கும் மணத்தைப் போல் தனக்குள்ளேயே உள்முகமாக ஆழ்ந்து சுகம் காணும் வீரம் எல்லாருக்கும் வாய்க்காதுதான். அப்படி வாய்க்கா விட்டாலும் பொன்னம்பலத்தைப் போல சிறு அதிர்ச்சியைக் கூடத் தாங்கி நிற்க முடியாது பூஞ்சை மனத்தைப் பெற்றிருக்கக் கூடாது. அப்படி மனம், அதை உடையவருக்கே வறுமை.