பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி ஒரு மதிப்பீடு 441

எழுந்திருந்ததும் முதல் வேலையாகப் பையன் முருகேசனைக் கூப்பிட்டு டியூஷன் வாத்தியார் நரசிம்மனைப் பற்றித் துருவித் துருவி விசாரித்தார்.

“என்னடா வாத்தியாரைப் பிடிச்சிருக்கா உனக்கு?”

பையன் தலையைச் சொறிந்து கொண்டு நாணி நின்றான்.

இந்தக் கேள்வியை வேறுவிதமாக மாற்றிப் 'படிப்பைப் பிடிச்சிருக்காடா உனக்கு?” என்று கேட்டிருந்தால் பையன் ஒரே வார்த்தையில் பதில் சொல்லியிருப்பான்.கேள்வி வாத்தியாரைப்பற்றியதாக இருந்ததனால் கொஞ்சம் தயங்கினான்.

“என்னடா தலையைச் சொறியறே? வாத்தியார் எப்படி இருக்காரு?"

‘பிடிச்சிருக்குப்பா. சிரிக்கச் சிரிக்கப் பேசறாரு. ரொம்ப நல்லா. மனசிலே பதியறாப்பிலே பாடமெல்லாம் நடத்தறாரு.”

“சிரிக்கச் சிரிக்கப் பேசறார்னா சொல்றே? உங்க வாத்தியாருக்குச் சிரிக்கறதுக்கும், பேசறத்துக்கும்கூடத் தெரியுமா?” என்று கேட்கத் தொடங்கி நடுவிலேயே உதட்டைக் கடித்துக் கொண்டு இந்தக் கேள்வியைப் பையனிடம் கேட்டிருக்கக்கூடாதென்று உணர்ந்தவராய் அடக்கிக் கொண்டார்.

இந்த வாத்தியார் தன்னைத் தவிர மற்ற எல்லாரிடமும் சிரிக்கச் சிரிக்கப் பேசுவதாய்த் தோன்றியது அவருக்கு ஏதோ கரணத்துக்காகத் தன்னை மட்டும் ஒதுக்கி வைத்து அலட்சியப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு வேதனைப்பட்டார் அவர்.

எப்படியாவது இந்த டியூஷன் வாத்தியாரைச் சரிப்படுத்திவிட வேண்டுமென்று தோன்றியது அவருக்கு. மறுநாள் டியூஷன் வாத்தியார் காம்பவுண்டுக்குள் நுழைந்தபோது கொஞ்சம் தைரியமாகவே அவன் எதிரே போய் நின்றுகொண்டு,

“வாத்தியார் சார். இப்படி ஒரு நிமிஷம் நின்று நான் சொல்றதைக் காதிலே வாங்கிட்டுப் போங்க. இந்த ஊர்லே நா ஒரு பெரிய மனுஷன். எனக்கு ஒரு "ஸ்டேட்டஸ்' இருக்கு. நீங்க என் பையனுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கிறதுக்காக வந்து போlங்க. இப்பிடி வேர்க்க விறுவிறுக்க நடந்து வரவேண்டாம். கார் அனுப்பிடறேன். நாளையிலேர்ந்து கார்லே வந்து போய்க்கிட்டிருங்க. அதுலே ஒண்ணும் குறைஞ்சிடாது.”

டியூஷன் வாத்தியார் நரசிம்மன் பதில் சொல்லாமல் சிரித்தான். சிரிப்போடு அந்த முகத்தில் கொஞ்சம் யோசனையும் தெரிந்தது.

“இப்போதைக்கு நான் செய்து கொண்டிருக்கிற ஒரே "எக்ஸர்சைஸ்” நடக்கிறதுதான்.அதையும் விட்டு விடுகிறதற்கில்லை. பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டே நடந்து மேலே போய்விட்டான் நரசிம்மன்.

இதைச் சாக்கு வைத்தாவது சிறிதுநேரம் அவனோடு நின்று பேசலாம் என்று அவர் எதிர்பார்த்தது வீணாயிற்று. மறுபடியும் அதே கேள்வி அவர் மனத்தில் எதிரொலித்தது.