பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

442 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

'உலகத்தின் சுகங்களையும், செல்வாக்கையும் முழுமையாக அனுபவித்தறியாத இந்த இருபத்தேழு வயது இளைஞன் மனிதர்களை எந்த அளவுகோலால் அளந்து பார்த்து மதிக்கிறான்?'

நரசிம்மன் ஒவ்வொரு முறை தன்னெதிரே நிற்கும்போதும் அவன் எதற்காகவோ தன்னைத் துச்சமாக மதிப்பதுபோல் எண்ணிக் கொண்டு கூசியது அவர் மனம், தம்முடைய பணம், பவிஷு, செல்வாக்கு, எதனாலும் தவிர்க்க முடியாத இந்தக் கூச்சத்தைப் பொறுத்துக் கொண்டு நிம்மதியாய் நிற்க முடியாமல் தவித்தார் அவர்.

இன்னொரு நாள் அவர் ரொம்பக் கலகலப்பாகச் சிரித்துக் கொண்டே டியூஷன் வாத்தியாருக்கு எதிரே போய், "பையனும் ரொம்ப ஆசைப்படறான். வாத்தியாரை ஒரு நாளைக்கு இங்கேயே சாப்பிடச் சொல்லணும்னு. இன்னிக்கு நீங்க இங்கேயே சாப்பிட்டுடுங்க..” என்றார் பொன்னம்பலம்.

“அதுக்கென்ன? இன்னொரு நாளைக்கிப் பார்க்கலாமே” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டு நடந்துவிட்டார் வாத்தியார். இப்போதும் அந்த இருபத்தேழு வயது இளைஞனால் அவர் ஏமாற்றப்பட்டார்.!

தன்னிடம் இப்படிச் சொல்லிவிட்டு நடந்து போன வாத்தியார், நேரே தோட்டக்கார முனியனிடம் போய்ப் பதினைந்து நிமிஷம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்புவதையும் அவரே தம் கண்களால் பார்த்தார். அவர் மனம் மிகவும் வேதனைப்பட்டது.

'கேவலம் நூறு ரூபாய் சம்பளம் வாங்குகிற இந்த டியூஷன் வாத்தியாருக்கு இவ்வளவு திமிர் ஆகுமா? என்று ஒரு கணம் பெரிதாகக் கோபம் மூண்டது அவர் மனத்தில் சற்று நிதானமாக யோசித்துப் பார்த்ததில் நரசிம்மனிடம் இதற்காக மட்டும் கோபப்படுவது நியாயமில்லை என்றும் தோன்றியது.

‘ஒரு மனிதன் தன்மானத்தோடும் தன்னடக்கத்தோடும் நிமிர்ந்து நின்று சிரிப்பதைத் திமிர் என்று எப்படிச் சொல்ல முடியும்?'

இன்னொரு சமயம் சரியான கோடைவெயிலில் நடுரோட்டில் வேர்க்க விறுவிறுக்க நடந்து போய்க்கொண்டிருந்த நிலையில் நரசிம்மனைச் சந்தித்துக் காரில் ஏறிக் கொள்ளும்படி வேண்டினார் அவர்.

“நீங்க வழக்கமாகத் தட்டிக் கழிக்கிறாப்போல இப்பவும் தட்டிக் கழிக்க முடியாது. இந்த நேரத்துலே நடந்து போறது எக்ஸர்சைஸாகவும் இருக்க முடியாது. யோசனை செய்யாமே ஏறிக்குங்க. சொல்றேன். எங்கே போகணுமோ கொண்டு போய் விட்டுடறேன்.”

"வேறே எங்கேயும் ரொம்ப துரத்துக்குப் போய்க் கொண்டிருக்கவில்லை. இதோ, பக்கத்திலே 'மெடிகல் ஸ்டோர்ஸ்' வரை போகணும் இங்கேயிருந்து இன்னும் பத்தடி தூரம். வீணாக உங்களுக்குச் சிரமம் எதுக்கு.? நடந்தே போயிடறேன்....”