பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / ஒரு மதிப்பீடு 443

இப்படிச் சொல்லிக் கொண்டே நடந்துவிட்டான் அவன். இப்போதும் அவன் அவரை ஏமாற்றிவிட்டான். தன்னை அந்த டியூஷன் வாத்தியார் மிகவும் கேவலமாகவோ, அலட்சியமாகவோ மதிக்கிறான் என்று உறுதியாக நம்பிக் கொண்டு அதற்காகக் குழம்பியது அவர் மனம்,

இந்த உலகத்தில் இதுவரை எத்தனையோ காரணங்களுக்காக எத்தனை பேர் அவரை மதிக்காமல் போயிருக்கிறார்கள். அதற்கெல்லாம் அவர் இவ்வளவு கவலைப்பட்டதில்லை. என்ன காரணமென்று சொல்லத் தெரியவில்லை. இவன் மட்டும் தன்னை மதிக்க வேண்டும்; தன்னோடு சிரித்துப் பேச வேண்டுமென்று அவருக்கே ஆசையாயிருந்தது. ஆனால் இந்த டியூஷன் வாத்தியாரோ அவர் நெருங்க நெருங்க அவரை விட்டு விலகி விலகிப் போகத் தொடங்கினான்.

இந்தப் புதிர் கடைசியில் ஒருநாள் அவிழ்ந்தது. ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை. பொன்னம்பலம் அடையாறில் நாலைந்து பெரிய மனிதர்களைச் சந்தித்து விட்டுத் திரும்புகிறபோது கொஞ்சம் காற்றாடலாம் என்று 'பீச்' ரோட்டில் எலியட்ஸ் கடற்கரையை ஒட்டிக் காரை ஓரமாகப் 'பார்க்' செய்துவிட்டு இறங்கிப் போன சமயத்தில் நாலைந்து இளைஞர்கள் கும்பலாக உட்கார்ந்திருந்த ஒர் இடத்திலிருந்து அந்த வாத்தியாருடைய குரலும் ஒலித்தது. அந்த மங்கலான வெளிச்சத்தில் அவர்கள் பேச்சுக் காதில் விழுகிறாற்போலப் பத்துப் பன்னிரண்டு அடி தள்ளி முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தார் அவர் ஆவேசம் வந்தவன் போல் அந்த வாத்தியார் கொதித்துக் கொதித்துப் பேசும் சொற்கள் அலை அலையாக வந்து அவர் காதில் விழுந்தன.

“இந்த மனுஷன் வீட்டுக்கு நான் டியூஷன் சொல்லிக் கொடுக்கப் போறதைப் பார்த்தே அக்கம் பக்கத்து நல்லவங்க பத்துப்பேர் என்னை வாயிலே வந்தபடி கன்னாப் பின்னான்னு பேசறாங்க..இந்த இலட்சணத்துலே.இவர் என்னடான்னா என் கார்லே ஏறிக்கோன்னு வேறே குழையறாரு... இவரோட கார் வேளை கெட்ட வேளையிலே எங்கேயெங்கே எல்லாமே போகுது வருது. நாளைக்கொரு நட்சத்திரத்து வீட்டு வாசலே நிக்கிது. கூட ஏறிப் போறவனோ பொய்ச் சாட்சி சொல்றவன், கருப்பு மார்க்கெட் பணக்காரன், ஈவு இரக்கம் தெரியாதவன்னு. விதவிதமான அயோக்கியனுகளாயிருக்காங்க. நான். ஏழை. பாமரன். ஆனாலும் என்னைப் பத்தி நாலுபேர் என்னிக்கும் நல்லபடியாப் பேசணும்னு மட்டும் ஆசைப்படறவன். ஒருத்தனுக்குப் பணமும், வசதிகளும் இருக்கிறவரை மதிக்கிற மதிப்பை, அதெல்லாம் போயிட்ட அப்புறம் நாளைக்கு உலகம் மறந்து போயிடலாம். கருணை, இரக்கம், நேர்மை இப்படிக் குணங்களால்தான் மனிதர்கள் நிலையாகக் கணிக்கப்படுகிறார்கள். ஏதோ வயிற்றைக் கழுவணும்னு எங்கே எங்கேயோ இருக்கோம். சுயகெளரவத்தையும் காப்பாத்திக்க வேண்டியிருக்கு.”

இதற்குமேல் கேட்டுக் கொண்டிருக்கப் பொறுக்காதவராய் பொன்னம்பலம் வேகமாக மணலிலிருந்து எழுந்து நடந்தார். அப்படி நடக்கும்போது அவர் மிகவும்