பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58. அரை மணி நேரம்

லுவலகக் கட்டிடத்துக்கு எதிர்ப்புறத்து நடைபாதை மேடையில் கொடுக்காப்புளிப் பழம் கூறு வைத்து விற்றுக் கொண்டிருந்த சூசையம்மாக் கிழவியிடம் அவசரம் அவசரமாக அரையணாவுக்கு நல்ல பழமாக வாங்கிக் கால் சட்டைப் பையில் திணித்துக் கொண்டான் பழநி,

பை நிறையக் கொடுக்காப்புளிப் பழத்தையும், மனம்நிறைய ஆசையையும் திணித்துக் கொண்டு அவன் நிமிர்ந்த போது அவ்வலுவலகத்துக்கு உரிமையாளரான முதலாளியின் கார் மிக அருகில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டான். மனம் 'அவர் தன்னைப் பார்த்திருப்பாரோ என்று பயந்தது. உடல் உதறியது. உள்ளும் புறமும் நடுக்கம். ஒரே ஓட்டமாக வீதியைக் கடந்து, அலுவலகத்துக்குள் நுழைந்து முதலாளியின் அறை முன் தனக்காக இருந்த ஸ்டுலில் உட்கார்ந்து கொண்ட பின்னே நிம்மதியாக மூச்சு வந்தது பையனுக்கு.

‘டக் டக்’ என்று பூட்ஸ் ஒலிக்கக் கம்பீர நடை நடந்து உள்ளே நுழையப் போகும் முதலாளியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவன் 'சல்யூட்' அடித்து எழுந்து நின்று அவரை வரவேற்க ஏற்றவாறு உடனே தன்னைத் தயாராக்கிக் கொண்டான்.

அவர் வருவதற்குத் தாமதமாயிற்று. அவன் அவருடைய காரை எந்த இடத்தில் பார்த்தானோ, அங்கிருந்து அலுவலக வாயிலுக்கு வர இரண்டு மூன்று விநாடிகள் கூட ஆகாதே! 'ஏன் தாமதம்' என்று விளங்காமல் வெளியே வந்து எட்டிப் பார்த்தான் பையன் பழநி, கார் எதிர்ப்புறத்து நடைபாதை ஓரம் நின்றது. பழநியின் உடல் வேர்த்தது; நடுங்கியது. ‘தான் அங்கே நின்று பழம் வாங்கியதை’ அவர் காரில் வரும் போதே பார்த்துவிட்டார் போலிருக்கிறது. அதுதான் அங்கே இறங்கிச் சூசையம்மாக் கிழவியிடம், “அந்தக் கழுதை பழநிப் பயல் இங்கே எதற்கு வந்தான்?” என்று மிரட்டிக் கேட்கப் போகிறார். அவள் உள்ளதைச் சொல்லி விடப் போகிறாள். இங்கே வந்து என்னை உதைக்கப் போகிறார். ‘ஏண்டா, தடிப்பயலே உன்னை இங்கே வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறேனா, அல்லது கொடுக்காப்புளிப் பழம் இருக்கிற குப்பைக் கடைகளையெல்லாம் தேடிக் கொண்டு ஓடுவதற்கு வைத்திருக்கிறேனா?’ என்று காய்ச்சி எடுக்கப் போகிறார். . இவ்வாறு எண்ணி நடுங்கினான் பையன். சிறிது நேரத்தில் கார் அலுவலக வாசலில் வந்து நின்றது. அவர் இறங்கி வந்தார். பழநி எழுந்து விறைப்பாக நின்று ‘சல்யூட்’ அடித்தான். கால் சராயிலிருந்த கொடுக்காப்புளி நுனி அவன் தொடையில் குத்தியது.