பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

446 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அவர் அவனைக் கவனிக்காததுபோல் ஸ்பிரிங் கதவைத் திறந்த கொண்டு தமது அறைக்குள் நுழைந்தார். முகம்கூட வழக்கத்தைக் காட்டிலும் சற்றக் கடுகடுப்பாகவே அன்று இருந்ததைப் பழநி பார்த்தான். பழநியின் பயம் அதிகமாயிற்று. மனத்தில் பலவிதமான ஆசை அவலக் களங்கங்களை வைத்துக் கொண்டு தவம் செய்ய முடியாத துறவியைப் போல் பையில் கொடுக்காப் புளியை வைத்துக் கொண்டு பயமின்றி.அங்கே நிற்க முடியாது போலிருந்தது அவனுக்கு. அவர் கோபமாக உள்ளே போயிருக்கிறார்; அதற்குத் தானே காரணமாக இருக்கலாம். திடீரென்று கூப்பிட்டு 'கால்சராயில் என்னடா?’ என்று சோதனை போட்டு மானத்தை வாங்கினாலும் வாங்கிவிடுவார். எதற்கும் முன்னெச்சரிக்கையாக இந்தப் பழத்தை வேறு எங்கேயாவது எடுத்து வைத்துவிட வேண்டும்’ என்று விழிப்பாக நினைத்துக்கொண்டு ஒரு தீர்மானத்துக்கு வந்தான் பழநி,

'ஆபீஸ் பையன்’ என்ற சிறிய பதவிக்குரிய அவனது ஆசனமாகயிருந்த ஸ்டுலின் அருகே குப்பைக் காகிதங்களைப் போடும் கூடை ஒன்று இருந்தது. அதில் அடியில் தன் பையிலிருந்த கொடுக்காப்புளிப் பழங்களை எடுத்துப் போட்டு மேலே குப்பைக் காகிதங்களை இட்டு மூடினான்.

ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு மணி நேரத்திலும் இலட்சக்கணக்கில் பணம் புரளும் பெரிய கம்பெனியின் அலுவலகம் அது. கோடீசுவரராகிய அந்த முதலாளிக்கு ஆபீஸ் பையனாக இருப்பதிலுள்ள பெருமையைக் கேவலம் கொடுக்காப்புளிப் பழம் தின்கின்ற ஆசையினால் கெடுத்துக் கொள்ளலாமா?’ என்று நினைக்கும்போதே தான் செய்தது தப்பு என்று உணர்ந்தான் பழநி,

“பாய்.!”

உள்ளேயிருந்து முதலாளியின் கடுமையும், கண்டிப்பும் நிறைந்த குரல் அவனை அழைத்தது. அவன் பயந்துகொண்டே உள்ளே விரைந்தான்.அவருடைய மேஜை மேல் 'செக்' புத்தகங்கள் விரிந்து கிடந்தன. பேனா, திறந்து வைத்திருந்தது. கடிதங்கள் அடுக்காக இருந்தன. இரண்டொரு பைல்கள் விரித்து வைக்கப்பட்டிருந்தன. அவர் பழநியிடம் கடுகடுப்போடு சொன்னார்.

“இன்னும் அரை மணி நேரத்துக்கு யாரையும் உள்ளே விடாதே. 'ஐயா பிஸி’யாயிருக்கிறார். இப்போது பார்க்க முடியாது என்று சொல்லி அனுப்பிவிடு. "டெலிபோன் ஏதாவது வந்தாலும் அரைமணி நேரத்துக்கப்புறம் கூப்பிடச் சொல்லி விடு. முக்கியமான வேலையாயிருக்கிறேன் நான்.”

"சரி, சார்” என்று கூறிவிட்டு வெளியே வந்து தன் பதவியின் அடக்குமுறையை நிலைநாட்டச் சரியான சமயம் கிடைத்துவிட்டதுபோல் கர்வத்துடன் ஸ்டூலில் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“ஏண்டா பழநி! ஐயா உள்ளே இருக்காரா? இந்தக் கடிதங்களிலெல்லாம் கையெழுத்து வாங்கணும்” என்று உரிமையோடும் ஒரு கொத்து டைப்