பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59. சொல்லாத ஒன்று!

கரத்தின் ஒதுக்குப்புறமாக இருந்தது அந்த மைதானம். நாற்புறமும் இரும்பு வேலி, நடுவில் திண்ணை போல் அகன்ற, உயரமான ஒரு சிமிண்டு மேடை மைதானத்தின் பின்புறம் சேறும் சகதியுமாக இருந்த பள்ளத்தில் ஏழெட்டுக் குடிசைகள். அவைகளிலும் மனித உயிர்கள் குடியிருக்கின்ற விந்தையை உலகத்துக்குச் சொல்லுவது போலச் சமையல் செய்யும் அடுப்புப் புகைச் சுருள்கள் கூரைக்கு மேல் படர்ந்து, வெட்டவெளியில் கலந்து கொண்டிருந்தன. -

அது அந்த ஊர் நகரசபையாருக்குச் சொந்தமான மைதானமே! அந்தச் சிமிண்டு மேடை கூட நகர சபையார் கட்டியதுதான். பொதுக் கூட்டங்கள் போடுகிறவர்கள் அதற்கென்று நகரசபையார் நிர்ணயித்திருக்கும் பணத்தைக் கட்டி முன் அநுமதி வாங்கிக் கொண்டால் அந்த இடத்தில் கூட்டம் நடத்தலாம்.

அநேகமாக ஒவ்வொரு நாளும் அந்த மைதானத்தில் ஏதாவதொரு கூட்டம் நடந்து கொண்டுதான் இருக்கும். பல ஆயிரக்கணக்கான மக்கள் உட்கார வசதியுள்ள அந்த மைதானத்தில், எப்போது கூட்டமானாலும் ஜனக் கும்பல் நிரம்பி வழியும். மைதானத்துக்கும், குடிசைகளுக்கும் இடையே ஒரு பெரிய சாக்கடை. மைதானத்துக்கு மிக அருகே ஒட்டினாற் போல், பக்கத்தில் இருந்தது சுடலையாண்டியின் குடிசை.

சுடலையாண்டி மில் கூலி. வயதான கிழவன். ஒற்றைக் கட்டை அவனுக்கு ஒரே பெண். அவளைப் பக்கத்து ஊரில் ஒரு பஸ் கண்டக்டருக்குக் கட்டிக் கொடுத்திருந்தான். ஒரு பேத்தி பிறந்து, ஆறேழு வயதுச் சிறுமியாக வளர்ந்திருந்தாள். கிழவனைப் பார்ப்பதற்காக எப்போதாவது பேத்தியும், பெண்ணும் வந்து போவார்கள். அன்றைக்கும் கிழவனைப் பார்க்க இருவரும் வந்திருந்தார்கள்.

மாலை ஏழு மணி, கிழவன் சுடலையாண்டி பேத்தியை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு குடிசை முகப்பில் உட்கார்ந்தான். மைதானத்தில் ஏதோ பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பேத்திக்காக வாங்கி வந்திருந்த மிட்டாய்ப் பொட்டலத்தை அதன் கையில் பிரித்துக் கொடுத்து விட்டுச் செவிகளைக் கூட்டத்து ஒலி பெருக்கியின் குரலில் செலுத்தினான் கிழவன்.

“தாத்தா மிட்டாயி இனிச்சுக் கெடக்கு.”

“இனிக்குதா? அவ்வளவும் உனக்குத்தான் கண்ணு! நல்லாச் சாப்பிடு”

சிறுமி எதையோ கவனித்து மோந்து வாசனை தெரிந்து கொண்டவள் போல் முகத்தைச் சுளித்தாள். திடீரென்று மிட்டாய்ப் பொட்டலத்தைக் கீழே போட்டு விட்டு இரண்டு கைகளாலும் மூக்கை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.