450 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்
குழந்தையின் பேச்சை ஒரு வழியாக அடக்கிவிட்டு, நிலையாக மேடையில் நடந்து கொண்டிருந்த சொற்பொழிவில் கவனத்தைச் செலுத்தினான் அவன்.
அது ஒரு பாராட்டுக் கூட்டம். தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவரைப் பாராட்டிப் பலர் பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் ஒரே மாதிரித்தான் பேசினார்கள் அதாவது வெற்றி பெற்றவரைப் புகழ்ந்தார்கள்.
கிழவன் கூட்டம் முடிந்ததும் பேத்தியைத் தூக்கிக்கொண்டு இராச் சாப்பாட்டுக்காகக் குடிசைக்குள் போனான். சாப்பாடு முடிந்ததும் படுத்துக் கொண்டான்.
மறுநாள் மாலை. அதேபோல் கிழவன் பேத்தியோடு குடிசை முகப்பில் வந்து உட்கார்ந்தான். அன்றும் மைதானத்தில் வேறொரு பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
பேத்தி முகத்தைச் சுளித்தாள். மூக்கை இறுக்கிப் பிடித்தாள்.
“தாத்தோய்.”
“என்ன கண்ணு?”
“ரொம்ப நாறுது:”
“ஒண்ணும் நாறாது சும்மா இரு!”
கிழவன் கூட்டத்துச் சொற்பொழிவில் கவனம் செலுத்தியிருந்தான். அன்று நடந்து கொண்டிருந்தது ஒரு பிரமுகரின் மரணத்துக்காக அநுதாபக் கூட்டம். அவருக்குப் பிறகு பூமியில் மனிதரே இல்லை; மனிதத்தன்மையே செத்துப்போய்விட்டது என்கிற தோரணையில் எல்லோரும் வருத்தத்துடன் பேசினார்கள். அன்றும் ஒரே புகழ்ச்சி தான்.
“தாத்தா அந்த நாயி இன்னும் அங்கேயே கெடக்கு. நாத்தம் வீட்டுலே உட்கார விடமாட்டேங்குது'
கிழவன் கவனம் கலைந்து குழந்தை கூறியது உண்மையா என்று அந்த இடத்தில் பார்த்தான். செத்த நாய் அங்கேயே கிடந்தது.
“பொறுக்க முடியலே தாத்தா! உள்ளே போயிறலாம்.”
“சரி வா. இல்லாட்டி உன் தெணதொணப்புச் சகிக்க முடியாது”
கிழவன் குழந்தையோடு குடிசைக்குள் போனான்.
மூன்றாம் நாள் மாலை. அன்று மைதானத்தில் ஒரு பிரம்மாண்டமான இலக்கியக்கூட்டம் நடைபெற்றது. சிலப்பதிகாரத்தைப் பற்றி ஒருவரும் திருக்குறளைப் பற்றி ஒருவரும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
கிழவன் பேத்தியை எடுத்துக் கொண்டு வாயிற்புறம் வந்தான்.
“தாத்தா. நான் உள்ளே போறேன். வாந்தி எடுக்க வருது!:”