பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / சொல்லாத ஒன்று! 451

உண்மையாகவே குழந்தைக்குக் குமட்டி ஒக்காளித்தது. இரண்டு கைகளாலும் அவள் மூக்கு இருந்த இடத்தையே மூடிக் கொண்டிருந்தாள். கிழவன் பார்த்தான். செத்த நாய் அங்கேயே கிடந்தது. அவனுக்கு மட்டும் நாறாதா? ஆனால் அவனுக்கு நாற்றத்தில் இருந்தே பழக்கம். அதனால் அது ஒரு கஷ்டம் அல்ல. ஒருவேளை பழக்கமில்லாத காரணத்தால் வாசனை அந்தக் கஷ்டத்தை உண்டாக்கினாலும் உண்டாக்கலாம். அன்றும் பாதிக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே குழந்தையோடு உள்ளே போய்விட்டான் கிழவன்.

நான்காம் நாள் ஒரு தெருக்கூத்து நாடகம் அந்த மைதானத்தில் நடந்தது. கிழவன் ஆவலோடு வந்தான்.பேத்தியும் வந்தாள்.பாதியிலேயே வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது சிறுமிக்கு கிழவன் மடியிலேயே வாந்தி எடுத்துவிட்டாள்.கிழவன் பார்த்தான். செத்த நாய் அங்கேயே கிடந்தது. முழுதும் பார்க்காமலே குழந்தையோடு குடிசைக்குள் போய்விட்டான் கிழவன்.

ஐந்தாம் நாள் மாலை சுகாதார வாரக் கொண்டாட்டம். மைதானத்தில் பிரம்மாண்டமான கூட்டம். 'சுத்தம் நமது பிறப்புரிமை' என்று முழங்கிக் கொண்டிருந்தார் ஒரு பேச்சாளர்.

“தாத்தா! இத்தினி பேச்சுப் பேசுறாங்களே... நாலு நாளா அந்தச் செத்த நாயி அங்கேயே கெடந்து நாறுதே பேசுறவங்க, கேக்கறவங்க யாருக்குமே அது நாறலைன்னு அர்த்தமா?” பேத்தி கிழவனைக் கேட்டாள்.

கிழவன் சிரித்தான்!

“அவங்களுக்கு அந்த நாத்தம் உறைக்கலே கண்ணு! அதனாலேதான் ஒருத்தரும் அதைச் சொல்லலே போறாங்க.போ. நீ வா. நாம் குடிசைக்குள்ளே போயிடலாம்!” கிழவன் குழந்தையோடு குடிசைக்குள் போய்விட்டான்.

(1960)