பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

476 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

என்று நினைத்து எழுதி, பேசி, ஸ்தாபித்து விட ஆசைப்படுகிறவனைக் காரில் அழைக்கிறாளே இவள்? என்ன தைரியம் இவளுக்கு?

“ஏன் யோசிக்கிறீர்கள் சார்? மழை பலமாக வருகிறது. உதவி செய்வதுதான் மனிதாபிமானம் என்று பக்கம் பக்கமாக எழுதுகிறீர்கள். உதவி செய்ய வருகிறவர்களைக் கண்டால் பயந்து தயங்குகிறீர்களே”

'அடடா! இந்தப் பெண் என்னைப் பற்றித் தெரிந்தவள் போலிருக்கிறது. இல்லாவிட்டால் என் எழுத்தைப் பற்றிப் பேசுவாளா?’ என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டேன்.

“ஏறிக் கொள்ளுங்கள் சார்' என்று மறுபடியும் இவள் குரல் கெஞ்சியது. இந்தக் குரல் என்னை எப்படி வசப்படுத்தியது என்று தெரியவில்லை. 'இந்த முகத்தில் ஏமாற்றத்தைப் படர விடுவது பாவம்' என்று நினைத்தோ என்னவோ காரில் ஏறிவிட்டேன். எந்த எம்.எஸ்.எக்ஸ் 07423-ஐப் பார்த்து நாள் தவறாமல் 'காரில் போகிறவர்கள் வாழ்க்கையில் எதை அனுபவிக்க முடியும்?' என்று கேலியாக நினைத்துக் கொண்டிருந்தேனோ அதில் நானே ஒசிச் சவாரி புறப்பட்டுவிட்டேன். எப்படி என் கொள்கைப் பிடியிலிருந்த நழுவினேனோ, எந்த விநாடியில் தடுமாறினேனோ அந்த விநாடி மிகவும் பொல்லாதது என்று நினைத்துக் கொண்டேன். முன் ஸீட்டிலிருந்து அவள் குரல் ஒலித்தது.

“போன மாதத்தில் புதுயுகம் இதழில் வெளிவந்த ஏழையின் குரல் என்கிற உங்கள் கதை நன்றாயிருந்தது சார்”

"ஓ! நீங்கள் புதுயுகம்கூட வாங்குகிறீர்களா? ஆச்சரியமாயிருக்கிறதே?”

“இதில் ஆச்சரியமென்ன? புதுயுகம் நல்ல அம்சங்களோடு தரமாக வருகிறது சார்”

“தரமாயிருக்கிற எதுவும் பெண்களுக்குப் பிடிக்காதென்று நைலான் எழுத்தாளர்கள் சொல்கிறார்களே, அதனால்தான் அப்படிக் கேட்டேன்.”

"அப்படி எனக்குத் தோன்றவில்லை சார். புதுயுகத்தில் வருகிற பகுதிகள் எல்லாம் மனத்தில் நிலையாகத் தங்குகின்றன. மற்றவர்கள் எப்படியோ, என்னைப் பொறுத்த மட்டில், புதுயுகத்தின் ஒவ்வொரு வெளியீடும் ஒரு கருவூலம்தான்.”

அடடா இந்த எம்.எஸ்.எக்ஸ் 07423 நங்கையைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்தது எவ்வளவு பெரிய தவறாக முடிந்துவிட்டது? இவள் முற்போக்கு எழுத்தை வணங்கும் இலட்சியப் பெண்ணாக அல்லவா இருக்கிறாள்? புதுயுகத்தில் நான் எழுப்பிய ஏழையின் குரல் இவள் செவிகளிலும் ஒலித்திருக்கிறதே!

நான் இறங்க வேண்டிய இடம் வந்தது.நிறுத்தச்சொல்லி இறங்கிக் கொண்டேன். “உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் மழை காலம் முடிகிறவரை தினசரி கல்லூரிக்குப் போகும்போது என் காரிலேயே உங்களைக் கொண்டு வந்து விட்டுவிடுகிறேன் சார். இவள் குரலில் அந்தச் செயலைச் செய்வதில் உள்ள ஆர்வம் பொங்கியது.