பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

496 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கவலைப்படலே சார். ஏன்னா நான் நிஜமாகவே ஞானின்னு எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு சார்.

அது சரி-நான்தான் இந்த உலகத்தைப் பத்தியே கவலைப்படலேன்னு முதல்லேயே சொல்லிவிட்டேனே. நான் கவலைப்படறதுக்கு வேற உலகம் இருக்கு சார்! ஆனால் நான் படற கவலையை என்னோடு சேர்ந்து படறதுக்கு வேறே மனிதர்கள் இருக்கிறதாகத்தான் தெரியவில்லை சார்! அதனாலும் பரவாயில்லை. பெரிய பெரிய விஷயங்களைப் பத்திக் கவலைப்படறவன் தன்னோடு துணைக்குக் கவலைப் படுகிறவர்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது. சரித்திரத்திலே இப்படிக் கவலைப்பட்ட வாளைப் பத்தி எழுதியிருக்கிறதை எல்லாம் படிச்சபோது அவாளும் என்னை மாதிரி ஆரம்பத்திலே தனித்தனியாகத்தான் கவலைப்பட்டதாகத் தெரிறயது சார்! நான்தான் சரித்திரத்துக்காகக் கவலைப்படவில்லையே! இந்து தேசசரித்திரம் என்ற பெயரையே 'இந்து தேச தரித்திரம்’னு மாற்றினால் பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறவன் சார் நான். இதை ஒரு நாள் என் புரொபஸரிடம் வேடிக்கையாகச் சொன்னேன் சார்! அவர் என்னோடு சண்டைக்கே வந்துவிட்டார். 'நீ ஒரு அயோக்கியன்’ என்று என் மேல் எரிந்தும் விழுந்தார்.அதையும் நான் மறுக்கவில்லை.நான் சொன்ன விஷயத்தைச் சொல்வதற்குத் தகுந்த 'ஸ்டேட்டஸ்' எனக்கு இல்லை என்று அவர் கோபப் பட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது சார்!

அவரிடம் இப்படிக் கேள்வி கேட்டதற்காகத் தாம் என்னை மன்னிக்க முடியாதென்றும் அவர் கூறினார்.

(1) நான் ஒரு லூஸ், (2) நான் ஒரு குழப்பம், (3) நான் ஒரு காலேஜ் மாணவன், (4) நான் ஒரு அசடு, (5) நான் ஒரு குட்டிச்சுவர், (6) நான் இங்கே பிறந்திருக்கக்கூடாது, (7) நான் ஒரு உருப்படாத பயல், (8) நான் ஒரு அயோக்கியன், (9) என்னை யாராலும் மன்னிக்கவே முடியாது. (10) பத்தாவது பேராகிய இதை இங்கே யாரும் சொல்லவில்லை - நானே எனக்குச் சொல்லிக் கொள்கிறேன். 'நான் ஒரு ஸ்டேட்டஸ் இல்லாதவன்'. அவ்வளவுதான் சார் என்ன சார்! இவ்வளவும் சொன்னதற்கு அப்புறம் என்னை நீங்களே இப்படி ஒரு தினுசாகப் பார்க்கிறீர்கள்?

................

புரிகிறது. சாந்தோமில் பங்களா உள்ளவருக்கு இரண்டு ‘கேடிலாக் கார்களின் சொந்தக்காரருக்கு மெட்ராஸிலேயே ஸ்டேட்டஸ் மிகுந்தவருக்கு - இப்படி சுத்த "லூஸாக' ஒரு பிள்ளை வாய்த்ததே என்று எண்ணிக் கொண்டுதானே பார்க்கிறீர்கள்? நீங்கள் இப்படித் தான் நினைப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். தெரிந்துதான் இவ்வளவும் சொன்னேன் சார் நீங்கள் என்னைச் 'சுத்த லூஸ்' என்று சொல்லாமல் புத்திசாலி என்று சொல்லியிருந்தால்தான் எனக்கு ஆச்சரியமாயிருக்கும். என்னை "லூஸ்' என்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை சார்! ஆனால் சொல்லும்போது ‘சுத்த லூஸ்' என்பதை மட்டும் நீங்கள் மறக்காமல் சொல்ல வேண்டும். நான் லூஸாயிருப்பதோடு சுத்தமாகவும் இருக்கிறேன் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

(தாமரை, நவம்பர், 1961)