பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/513

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி/அர்த்தம் பிறந்தது * 511

“இருக்கலாம்! ஆனால் மனிதர்கள். உயிரும் சதையுமாய் இருப்பவர்கள் அர்த்தம் பிறவாத காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதை நான் வெறுக்கிறேன்.”

சார்ல்வுட்டின் ஆத்திரத்தைப் பார்த்துப் புஜங்கராவுக்குச் சிரிப்புப் பொங்கிக்கொண்டு வந்தது. ஆவல் அடங்குகிறவரை நன்றாகச் சிரித்துவிட்டு அந்த ஆங்கில நண்பருக்கு விடை கொடுத்து அனுப்பினார் அவர்.

புஜங்கராவின் வாழ்க்கையில் இதுவரை எந்த அநுபவத்துக்கும் அர்த்தம் பிறந்ததில்லை. தம்முடைய இருபத்தெட்டாவது வயதில் காப்பித் தொழில் நுணுக்கங்களைக் கற்று வருவதற்காகத் தகப்பனாரால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட போதும், ஆறடி உயரமும் நன்றாகப் பழுத்த ஆரஞ்சுப் பழத்தினும் சற்றே வெளுத்த சிவப்பு நிறமும் கொண்டு வெளிநாட்டுச் சூழ்நிலையில் வைத்துப் பார்த்தால் இவர் இந்தியர்தாமா?’ என்று சந்தேகப்படக்கூடிய தம்முடைய தோற்றத்தினால் பிரேஸிலில் ஒரு வெள்ளைக்கார யுவதியைக் கவர்ந்து காதலித்து மணம் புரிந்துகொள்ள நேர்ந்தபோதும், மணம் புரிந்துகொண்ட சில மாதங்களிலேயே அந்தப் பெண் கார்விபத்தில் மாண்ட பெருந்துயரத்தின்போதும், அந்தத் துயரத்தோடும், ஒரு பெண்ணுக்குச் சிறிது காலம் கணவனாக இருந்தோம் என்ற நினைப்போடும் தாய்நாடு திரும்பி வந்தபோதும் எப்போதும் அவருடைய வாழ்க்கையின் அர்த்தம் அவரே புரிந்துகொள்ளும்படி விளைந்ததில்லை. அவர் பிரேஸிலில் தங்கிக் கற்று வந்திருந்த காப்பிப் பயிர்த் தொழிலினாலும், மற்ற நுணுக்கங்களினாலும் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்குள் எமரால்ட் எஸ்டேட்டின் வளம் பெருகி வளர்ந்திருக்கிறது என்பதுதான் ஒரே விளைவு. ஆனால் இந்த விளைவை மட்டுமே தம்முடைய வாழ்வின் அர்த்தமாகக் கொள்ள அவர் தயாராயில்லை. வேறு ஏதோ ஒர் அர்த்தம் இருக்கவேண்டும் என்றே அவருக்குத் தோன்றியது. அந்த அர்த்தம் எது என்பதுதான் அவருக்கு இன்று வரையில் புலப்படவில்லை.

காரியமாகிய விளைவுக்குப் பிறகுதான் சில காரணங்கள் அழகாகத் தோன்றும். அதேபோல் அர்த்தம் புரிந்தபின்புதான் அந்த அர்த்தத்தைப் பிறப்பித்த பதங்கள் முன்னைக்காட்டிலும் அழகாகத் தோன்றும். அவருக்கு அப்படித் தோன்றிய சமயங்களும் உண்டு.

புஜங்கராவ் தம்முடைய பதினான்காவது வயதில் மங்களூரில் ஹைஸ்கூல் படிப்புப் படித்தபோது முதன் முதலாக 'எமரால்ட்'என்கிற ஆங்கில வார்த்தையைக் கற்றுக்கொண்டார். அந்த 'வார்த்தைக்குப் பச்சை நிறமுள்ள மரகதம்’ என்று அப்போது அர்த்தம் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். ஆனால் அந்தப் பதத்தின் அர்த்தம் எவ்வளவு அழகு நிறைந்தது என்பது பள்ளிக்கூடத்திலும், வகுப்பறையின் வேத புஸ்தகமான அகராதியிலும் அவருக்குப் புரியவில்லை. தன் தகப்பனார் உதகமண்டலத்தில் எஸ்டேட் வாங்கியபோதுதான் புஜங்கராவ் எமரால்ட் என்ற வார்த்தைக்கு எவ்வளவு அழகான அர்த்தம் இருக்க முடியுமென்பதை விளங்கிக்கொண்டார்.